பேரறிவாளனைக் கொலை செய்து விடுங்கள்: அற்புதம்மாளின் கதறல் -
நீண்டகாலமாக தன் மகன் விடுதலை செய்யப்பட்டு நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்புவான் என்று எதிர் பார்த்த அற்புதம்மாளுக்கு மீண்டும் ஏமாற்றம் தான் பதிலாக வந்திருக்கிறது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கான விடுதலை மனுவினை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழகத்தின் பிரபல இணையத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்துரைத்த பேரறிவாளினின் தாயார் அற்புதம்மாள் “ என் புள்ளையைக் கொன்னுடுங்க. மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும்” மனம் உருகச் சொல்லியிருக்கிறார்.
அதில், நேற்று வரை என் புள்ளை ஒருநாள் திரும்பி வருவான் என்று நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையையும் இந்த அரசு கொலை செய்துவிட்டது. தப்பு செய்யாத குழந்தையை இந்த அரசாங்கத்துக்கு காவு கொடுத்துட்டு மனம் வேதனையடைந்து கொண்டிருக்கிறேன்.
இரண்டு மாதம் பரோல் கொடுத்தாங்க. அவன் வெளிய வந்த நேரத்தில், அவனுடைய நண்பர்கள் என்று நிறையப் பேர் வந்து பார்த்திருந்தார்கள்.
26 வருஷமா மக்க மனுசரோடு பழகாம, திடீர்னு எல்லா மகிழ்ச்சியையும் அனுபவிச்சுட்டு திரும்பவும் ஜெயிலுக்குள்ளே புள்ளை ஏங்குவானேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சு.
பரோல் முடிஞ்சு போகும்போது காவல்துறை அதிகாரிகள், 'இந்த 60 நாளில் எத்தனையோ தலைவர்களும் பொதுமக்களும் வந்து போனங்க. ஆனால், ஒரு சின்னப் பிரச்சினைகூட உங்க பையன் மூலமா வரல. ஒரு கைதியால் சிறையிலும், பரோலில் வந்திருக்கும்போதும் இப்படி பிரச்சினை இல்லாமல் இருக்கிறது ரொம்ப ஆச்சர்யம்மா.
உங்க பையனை நல்லா வளர்த்துருக்கீங்க'னு சொல்லிட்டுப் போனாங்க. அப்படிப்பட்ட புள்ளையால் இந்த நாட்டுக்கே பிரச்சினையாகிடும்னு இந்த அரசாங்கம் பயப்படறது எந்த வகையில் நியாயம்?
இன்று என் பிள்ளையின் மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவன் இளமை முழுவதையும் இழந்துவிட்டான். இதுக்கு மேலே இழக்கிறதுக்கு என்ன இருக்கு? அவனால் பிரச்சினை வரும். வில்லங்கம் வரும். வெளியில் விடமுடியாது என்று பயம் இருந்தால் இந்த அரசாங்கத்திடம் நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள்ளையை கொலை செய்து விடுங்கள்.
மரண தண்டனை கொடுங்கள். என் மகனை இப்படி பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அவன் இல்லை என்று அறிந்தால் சிறிது காலத்திற்கு புலம்பிவிட்டு பேசாமல் இருந்துவிடுவேன் என்று மனம் உருகிப் பேசியிருக்கிறார் அற்புதம்மாள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வது தான் தமது நிலைப்பாடு என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முந்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனைக் கொலை செய்து விடுங்கள்: அற்புதம்மாளின் கதறல் -
Reviewed by Author
on
June 18, 2018
Rating:
No comments:
Post a Comment