வடக்கு முதல்வருக்கு கவலையளித்துள்ள விடயம் -
மனிதன் செவ்வாயில் காலடி வைக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் போதும் இயற்கையின் அழிவை தடுப்பதற்கு போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை கவலையளிக்கும் விடயமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மாநகரசபை, வட மாகாண விவசாய அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ். பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மர நடுகை விழா யாழ். முற்றவெளி திடலில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்துரைக்கையில்,
இயற்கை வளங்களான நீர் நிலைகள், காடுகள், வனாந்தரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும் இறைவனால் வடிவமைக்கப்பட்ட இயற்கை பொக்கிஷங்கள்.
மனித குலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு எங்கள் சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது.
இந்த சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன.
காலம் செல்ல செல்ல மனிதனின் சுய நலமும், அகந்தையின் ஆதிக்கமும் இயற்கையை அழிக்க வழிவகுத்தது. இன்று இயற்கையை அழித்து வாழ முற்பட்டதால் சூழலில் பாரிய மாற்றங்களும், தீங்கான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய தீங்குகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
பொலித்தீன் போன்ற பொருட்களால் கடற்கரையோரங்கள் மிகக்கூடுதலான அளவில் மாசடைகின்றன. இவற்றை மாசடையச் செய்யக்கூடிய நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விற்பனை ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா என்பதை மாநகர சபை கண்காணித்தல் வேண்டும்.
புதிதாக முளைத்துள்ள மாபெரும் நட்சத்திர ஹோட்டல்களும், அவற்றிற்கு சமமான விடுதிகளும் தமது கழிவுகளை எவ்வாறு அகற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் கண்காணிப்புக்கள் அவசியமானவை.
மனிதன் செவ்வாயில் காலடி வைக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இயற்கையின் அழிவைத் தடுப்பதற்கு போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு முதல்வருக்கு கவலையளித்துள்ள விடயம் -
Reviewed by Author
on
June 05, 2018
Rating:
No comments:
Post a Comment