தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்க நடக்கும் முயற்சி -
படர்கல் பத்தினியம்மன் ஆலய கழஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பயணிக்கும் போதுதான் இந்த மாவட்டத்தின் உரிமையை, மாவட்டத்தின் தேவையை நாங்கள் நிறைவு செய்ய முடியும். நில ஆக்கிரமிப்பு ஏனைய கலை கலாசார பொருளாதார விடையங்களை கட்டிக்காக்க முடியும். மத மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியும். நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பயணிக்கவேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அந்த காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் ஏனைய பேரினவாத கட்சிகளையோ, ஏனைய இதரக் கட்சிகளையோ ஆதரிக்கும்பொழுது இந்த பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.
பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக்கப்படும் விடயத்தை கருத்திற்கொண்டு அதனை தகர்க்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்திலே தமிழ் தேசியத்திற்கு உங்களது பங்களிப்புக்களை செய்யாவிட்டால் உங்களது தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படும். அவ்வாறு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமானால் எமது நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஏனைய மத மாற்றங்கள், அத்துமீறல்கள், பொருளாதார சீர்கேடுகள், பொருளாதாரம் பின்தள்ளப்படுகின்ற விடையங்கள், கலாசார சீர்கேடுகள் என்பனவற்றிக்கு முகம்கொடுக்கநேரிடும் அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.
வடகிழக்கிலே பேரினவாத சக்திகள் கூட்டமைப்பை சிதைப்பதன் மூலம் நிலம், கலாசாரம், மதமாற்றம் போன்ற சீர்கேடுகளை நிறைவேற்ற எத்தனிக்கின்றது.
இன்று பேரினவாத கட்சிகள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து பலத்தை குறைத்து சின்னாபின்னமாக்க கங்கணம் கட்டுகின்றன. இவர்களது பிரதான நோக்கம் தமிழர்களது பிரதிநிதித்துவத்தை கிழக்கில் குறைத்து தமிழர்களது நிலங்களையும், பொருளாதாரத்தையும் குறைக்கவேண்டும் வேண்டுமென்பதே அவர்களது எண்ணம்.
யுத்தத்திற்கு முன்னர் நிலங்கள் எங்களது கையில்தான் இருந்தது, கல்வி, பொருளாதார வளர்ச்சி கூடுதலாக இருந்தது. ஏனைய அடிப்படை கலாசாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட்டன. ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளாகின்றன.
ஆனால் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றோம். திட்டமிடப்பட்ட முறையிலே காணி அபகரிப்பு, மதமாற்றம், பாரம்ரிய கல்வெட்டுக்கள் திரிவுபடுத்தப்படுகின்றன, தமிழர்களது கலாச்சாரங்கள் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தும் யுத்தத்தின் பின் 10 வருடங்களில் அனுபவித்து வருகின்ற ஒன்று.
தமிழ் மக்களது தாய்க்கட்சிதான் தமிழ் மக்களின் புரையோடிப்போன சுய நிர்ணயம், தீர்வுத்திட்டம் அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட போராட்டங்களுக்கு முகம் கொடுக்கின்றது.
யுத்தம் மௌனித்து 10 ஆண்டிற்கு பின்னர் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தம் மிகவும் ஆபத்தானதாகும். இதனை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு போர் என்று கூறலாம்.
ஆனால் அதனை அறியாத தமிழர்கள் தன் இனத்தின் மீது போர் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதை அறியாது பேரினவாத கட்சிகளின் அற்ப சுகங்ளுக்கும், சலுகைகளுக்கும் இசைந்து கொடுப்போமானால் சத்தமின்றி எமது நிலங்கள் சூறையாடப்படும்.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் வந்த பத்து ஆண்டுகளில் தமிழர்களின் நிலப்பரப்புகள், தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம், தமிழர்களின் கல்வி வளர்ச்சி, தமிழர்களின் கலாசார பண்பாட்டு ஒழுக்க விழுமியங்கள் வேலைவாய்ப்புகள், விவசாயம், நீர்வளம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என அனைத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதை விட முக்கியமாக அரசியல் ரீதியாக தமிழர்களின் கட்டமைப்பு உடைக்கப்பட்டு பல கட்சிகளாக சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றனர். அதாவது தமிழ் மக்களை அவர்களது தாயக பூமியிலேயே இரண்டாம் தர சிறுபான்மையினராக மாற்றும் முயற்சிகள் மிக வேகமாக நடந்து வருகிறது என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்க நடக்கும் முயற்சி -
Reviewed by Author
on
April 17, 2019
Rating:
No comments:
Post a Comment