இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்தும் தமிழர் தேசங்களில் மட்டுமே: சிறீதரன் எம்.பி ஆதங்கம் -
இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்தும் தமிழர் தேசங்களில் மட்டுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய மே நாள் பச்சிலைப்பள்ளி நகர மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தாக்குதல்கள் நடைபெறாத இடங்களிலெல்லாம் சோதனைச் சாவடிகள் தமிழர்களின்பிரதேசங்களிலே நிறுவப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் நடைபெறப் போவதாக சர்வதேச புலனாய்வு, அயல் புலனாய்வுகள் போன்றவை அச்சுறுத்தி இருந்தும்கூட சாகடிக்கப்படப் போபவர்கள் தமிழர்கள்தான் என்பதால் அரசு கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.
தமிழர்களை தொடர்ந்தும் இன அழிப்பு செய்வதில் இலங்கையின் ஒவ்வொரு அரசுகளும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
எமது தொழிலாளர்களினுடைய பல வளங்களை ராணுவம் இன்னமும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் சிகை அலங்கரிப்பு நிலையம் நிலைத்திருக்கிறது.
சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்ற பெயரில் எமது மக்களினுடைய விவசாய காணிகள் பலதை பலவந்தமாக அபகரித்திருக்கிறார்கள். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பின்பே இந்த அரசாங்கமும் சர்வதேசமும் தீவிரவாதம் எது விடுதலைப் போராட்டம் எது என்பதை கண்டுகொண்டிருக்கிறது.
இறுதியாக நடந்த இந்த தாக்குதலுக்கு பின்னால் தமிழர்களுடைய உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் சர்வதேசம் இலங்கையை இரக்கத்தோடு பார்க்க தொடங்கி இருக்கிறது.
தமிழர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான சுரேன் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர் உறுப்பினர்கள், தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்தும் தமிழர் தேசங்களில் மட்டுமே: சிறீதரன் எம்.பி ஆதங்கம் -
Reviewed by Author
on
May 02, 2019
Rating:
No comments:
Post a Comment