அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் அமெரிக்கா பயணம்........

எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதிவரை அமெரிக்க நாட்டில் உள்ள சிக்காக்கோ மாநிலத்தில் இடம்பெறும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் அமெரிக்கா செல்கிறார்.
மன்னார் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க குருவாகிய இவர் மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் இன்னும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த கலை இலக்கிய சமய சமூக அமைப்புக்களில் பங்கேற்றுப் பணியாற்றிவரும் தமிழ் நேசன் அடிகளார் இம்மாநாட்டில் காத்திரமான பங்களிப்பை வழங்கவுள்ளார்.

 “தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்களிப்பு” என்ற தலைப்பில் தமிழ் நேசன் அடிகளார் இம்மாநாட்டின் ஆய்வரங்கில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றுகின்றார். 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மேலைநாட்டுத் தமிழ் அறிஞரான காலம்சென்ற கமில் சுவலபில் (1927 – 2009) அவர்கள் செக் குடியரசு எனப்படும் யூகோசுலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தமிழ்ப்பணி பரந்து விரிந்தது. இவர் ஏறக்குறைய 25 நூல்களை எழுதியுள்ளார். மொழியியல், இலக்கியம் இலக்கணம், நாட்டுப்புறவியல் பற்றிய நூல்கள் ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் மொழிபெயர்ப்பு என ஏறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட படைப்புக்களை வழங்கியுள்ளார். தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவிற்கு இவருக்கு தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் இருந்துள்ளமை எவருக்கும் வியப்பளிககும் விடயமாகும். தமிழ் ஒலியே கேட்காத நாட்டில் இருந்துகொண்டே தமிழ் கற்று தமிழின்மேல் காதல்கொண்டு பல நூறு ஆய்வுகளை மேற்கொண்டவர். தமிழின் எல்லாத் துறைகள் பற்றியும் மேலைநாட்டினருக்கு அறிமுகம் செய்தவர். இருபதாம் நூற்றாண்டு மேலைத்தேய தமிழியல் ஆய்வாளர்களில் கமில் சுவலபில் அவர்களே தமிழுக்கு அதிகம் பங்களிப்புச் செய்தவர் எனலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் அறிஞர் பற்றிய ஆய்வுக் கட்டுரையே தமிழ் நேசன் அடிகளார் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்தப் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் சிக்காகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புக்களின் ஒத்துழைப்போடும் இடம்பெறுகின்றது.
அமெரிக்காவில் உள்ள ஏறக்குறைய ஐம்பது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32வது ஆண்டு விழாவும் சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் 50ஆவது ஆண்டுப் பொன்விழாவும் இணைந்ததாக இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளும் யூலை 4ஆம் 5ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. இதைத் தொடர்ந்து யூலை 6ஆம் 7ஆம் திகதிகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகின்றது. ஆகவே இந்த மூன்று நிகழ்வுகளும் யூலை மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு சிக்காகோ மாநிலத்தில் உள்ள இலிநொயிஸ் (illnois) என்ற நகரத்தில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில் இருந்தும் உலகின் ஏனைய பாகங்களில் இருந்தும் ஐயாயிரத்திற்கும் அதிகமான அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மாநாட்டை ஒட்டியதாக யூலை 4ஆம் திகதி இடம்பெறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்  (FeTNA) ஆண்டு விழாவின்போது ‘Global Tamil Hour’ என்னும் பொது அமர்வில் இலங்கை சார்பாக இலங்கையின் இன்றைய நிலை தொடர்பாக தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்றுகின்றார். அத்துடன் பிரதான அமர்வுகளுக்கு புறம்பே நடைபெறவுள்ள பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார். இதைவிட வோசிங்ரன்,பொஸ்ரன், நியூ யோர்க்,கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் அமெரிக்கா பயணம்........ Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.