அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் மக்களினதும் எனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.

முஸ்லிம் மக்களினதும் எனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துங்கள். இரணைதீவு வாழ் மக்கள் கோரிக்கை. (மன்னார் நிருபர்) (3-03-2021) கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று புதன் கிழமை (3) காலை இரணை தீவு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு,வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். -குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, 

 இரணைதீவு வாழ் பொதுமக்களான நாம், கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை எமது இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலித்து உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இரணைதீவு தீவகக் கிராமமானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள கரையோரக் கிராமங்களில் இருந்து 20 கிலோ மீற்றர்கள் தூரத்தில் மன்னார் வளைகுடாக் கடலில் அமைந்துள்ளது. 

 இது 417 குடும்பங்களின் பூர்வீகமாகும். யுத்தத்தின் காரணமாக, இத் தீவைச் சார்ந்த மக்களான நாம் எமது வாழ்வாதாரச் சாதனங்களையும், கால்நடை வளப்புகளையும், குடியிருப்புகளையும் விட்டு விட்டு 1997இல் முழுமையாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள முழங்காவில் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தோம். இலங்கைக் கடற்டையினர் இரணைதீவை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தாலும், எமது இரணைதீவு கிராமத்துக்கு திரும்பிச்செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

 2016 இல் நாம் எமது மீள் குடியேற்றத்;தை வேண்டி ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களையும் பரிந்துரை நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம். எமது ஓரிட அமர்வு போராட்டத்தின் 395வது நாளான அன்று, 23 ஏப்ரல் 2017இல், எமது சொந்த உந்துதலில் வெள்ளைக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு 50 மீன்பிடிப் படகுகளில் கடலைக் கடந்து எமது சொந்தக் கிராமத்தில் இறங்கினோம். நாம் தரையிறங்குவதை கடற்படையினர் தடுக்கவில்லை. தற்போது மிகவும் சிரமங்களுடன் எமது வாழ்வை இத் தீவில் மீளக் கட்டியெழுப்பி வருகிறோம். 

  இரணைதீவை சூழவுள்ள கடலானது பல்வேறு வகைப்பட்ட கடலுணவுகளால் நிறைந்திருப்பதுடன் ஏற்றுமத்தி தரத்திலான கடலட்டைகளும் இங்கு நிறைந்துள்ளன. வடபிரதேச மீனவர்கள் தமது படகுகளின் இயந்திரக் கோளறுகளின் போது இத் தீவில் கரையொதுங்கி அவற்றைத் திருத்தவும், எரிபொருள் நிரப்பவும், வலைகளைத் திருத்தவும், சற்றுக் கலைப்பாறவுமான ஒரு துறையாக இரணைதீவு உள்ளது. இத்தீவின் மண் வளமானது. மரங்கள் நிறைந்த இத்தீவு பயிர்ச்செய்கைக்கும் கால்நடை வளர்ப்புக்கும் உகந்த இடமாகும். 

 இந்தத் தீவை கோவிட் 19 இனால் மரணிப்பவர்களின் இடுகாடாக மாற்றுவது எமது வாழ்வை முழுமையாக சீரழித்துவிடும். சாதாரண வானிலையின் கீழ் முழங்காவில் கரையிலிந்து இரணைதீவுக்கு படகில் செல்ல ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும். கடல் சீற்றமாக இருந்தால் அல்லது வானிலை பாதகமாக இருந்தால் கடற்பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, வைரசினால் இறந்த ஒருவரின் உடலத்தை படகு மூலம் பாதுகாப்பாக 20 கிலோ மீற்றர்கள் கடலைக் கடந்து கொண்டு செல்வது எவ்வகையிலும் சாத்தியப்படாததாகும். 

 இரணைதீவு வாழ் மக்களான நாம், எமது சக வடக்கு கிழக்கு வாழ் மக்களுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூகத்தின் நல்லடக்க உரிமைக்காகவும் கட்டாய தகனத்தை எதிர்த்தும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறோம். எமது நாட்டின் கலாசாரத்துக்கு அமையவும் உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு அமையவும் இறந்த உடலங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். கோவிட் தாக்கத்தினால் இறக்கும் நபர்களின் உடலங்களை இடத்துக்கு இடம் காவிச்செல்வது இறந்தவர்களின் கௌரவத்தையும் அவர்களின் குடும்பத்தினரின் கௌரவத்தையும் மீறுவதாகும். 

 எனவே, கோவிட் பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் புதைகுழியாக இரணைதீவை மாற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விவேகமற்ற தீர்மானத்தை நீக்குமாறு அசராங்கத்தை வலிறுயுத்துகிறோம். அத்துடன், முஸ்லிம் மக்களினதும் எனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறும் கோருகிறோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.










முஸ்லிம் மக்களினதும் எனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துங்கள். Reviewed by Author on March 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.