வவுனியா மாநகரசபை மேயரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை
வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபனை பதவியில் இருந்து நீக்கி வடமாகாண ஆளுனரால் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுனரின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரரான வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (03) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
வட மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர மேயர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார்.
அதற்கு எதிராக எழுத்தாணை மனு ஒன்று வவுனியா மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் (02) தாக்கல் செய்யப்பட்டு, இன்று (03) அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதற்கான அறிவித்தல் பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதிவாதிகள் இன்று சமூகமளித்திருக்கவில்லை. இந்த மனுவிலே காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும், மனுதாரர் சார்பில் வெளியிடப்பட்ட சமர்ப்பணங்கள் தொடர்பாகவும் மன்று திருப்தியடைந்து எதிர் மனுதாரருக்கு அறிவித்தல் சேர்க்கும் படியான ஒரு கட்டளையை நியமித்திருக்கிறது.
அத்துடன் இந்த மனுவில் மூன்று இடைக்கால நிவாரணங்களையும் நாம் கோரியிருந்தோம். காண்டீபன் அவர்களை முதல்வர் பதவியிலும் அல்லது உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குகின்ற குறித்த வர்த்தமானி பிரசுரத்தை இடைநிறுத்தும் படியாக நாம் கேட்டிருந்தோம். அது இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இரண்டாவது அந்த வர்த்தமானியின் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்கக்கூடாது என்ற ஒரு தடை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக காண்டீபனை பிரதியீடு செய்கின்ற வகையில் இன்னொரு முதல்வரை தெரிவு செய்வதற்கோ, நியமிப்பதற்கோ அல்லது உறுப்பினரை தெரிவு செய்வதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்கின்ற தடை உத்தரவையும் கோரியிருந்த நிலையில் அது வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவுகள் தொடர்பாக வருகின்ற 15 ஆம் திகதி எதிர் மனுதாரர்கள் நீதிமன்றில் சமூகமாயிருந்து இதற்கான நிலைப்பாடுகளை தெரிவிக்கலாம். அதுவரை இந்த உத்தரவுகள் அமுலில் இருக்கும் என்றார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகளான ஆர்.தயாபரன், கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.
வவுனியா மாநகரசபை மேயரை பதவி நீக்கிய வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை
Reviewed by Vijithan
on
July 03, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 03, 2026
Rating:


No comments:
Post a Comment