ரொறன்ரோ-யாழ். நகரங்களை இணைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து....
கனடாவின் ரொறன்ரோ மாநகரத்திற்கும், யாழ்.நகரத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன் படிக்கை ஒன்று நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ரொறன்ரோ மாநகர் சார்பாக ரொறன்ரோ மாநகர மேயர் ஜோன் ரொர்ரியும், யாழ்ப் பாணம் சார்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்.பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இவ் உடன்படிக்கையானது கல்வி,நூலகம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதன் மூலம் யாழ் மாவட்டத்துக்கு எவ்வாறு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையிலும் அமைந்துள்ளது.
இந்த உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கனடா ரொறன்ரோ மாநிலத்தில் அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் எனவும் அவர்களின் உதவியுடனும், யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த கனடா அரசாங்கம் மேலதிக உதவிகளை மேற்கொள்ளும் என்றும் மாநில முதல்வர் உறுதியளித்திருந்தார்.
மேலும் வடமாகாண முதலமைச்சர் வட மாகாணத்தின் வரைபடத்தினை விசேட வகையில் அமைத்து, அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அதேபோன்று ரொறன்ரோ முதல்வரும் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்தச்சந்திப்பில், ரொறன்ரோ மாநகர சபை சார்பாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர்கள், சிரேஷ்ட ஆலோசகர், யாழ்.மாவட்டம் சார்பாக வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ரொறன்ரோ-யாழ். நகரங்களை இணைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து....
Reviewed by Author
on
March 20, 2017
Rating:
No comments:
Post a Comment