டெனிஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவு: செல்வம் அடைக்கலநாதன்....
வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி கோரிய போது தான் பதவி விலக மாட்டேன் என்றும் கட்சி தனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருக்கின்றார்.
அவருடைய கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த விடயத்தில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்தை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தனது கட்சியின் கட்டுப்பாட்டுடன் இணைந்து செயற்பட்டமையினால் இன்று வரை அவரை கட்சி ஒரு போதும் கை விடாத வாய்ப்பினை பெற்றுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் உயர் மட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கூட இருக்கின்றது.
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம்.
எங்களைப் பொறுத்த மட்டில் அமைச்சர் டெனிஸ்வரன் ஊழல் செய்திருக்கின்றார். அவர் நிறைய கையாடல் செய்திருக்கின்றார்.
மாகாண சபை அமைச்சரவையில் துஸ்பிரயோகம்செய்திருக்கின்றார் என்ற கருத்திற்கு எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் இடமில்லை.
ஆனால் அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான நோக்கம்.
நாங்கள் எழுதிய கடிதத்தில் ஊழல் தொடர்பிலும், அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பிலும் எதுவும் இல்லை. ரெலோவின் தலைமைக்குழு கடந்த வாரம் கூடிய போது அமைச்சர் டெனிஸ்வரன் கலந்து கொண்டு விளக்கத்தையளித்தார்.
அவரிடம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சி கோரியிருந்தது. ஆனால் தனக்கு ஒரு நாள் அவகாசத்தை கோரியிருந்தார்.
அவருடைய கோரிக்கைக்கு அமைவாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்கள் மூலமாக தான் சுய விருப்பத்துடன் பதவி விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக ஒரு செய்தியை சொல்லி இருந்தார். கட்சி எனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருக்கின்றார்.
டெனிஸ்வரன் இந்த விடயத்தில் அதுவும் கட்சி கூறியதை கேட்டிருந்தால் கடைசி வரைக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அவருடன் நின்றிருக்கும் என நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
மாகாண சபை விவகாரம் என்பது என்னைப் பொறுத்த மட்டில் மக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மாறி மாறி கருத்துக்களை கூறுகின்ற விடயங்கள் எங்களுக்கும் வேதனையை ஏற்படுத்துகின்றது. மக்களுக்காக சேவை செய்கின்ற மாகாண சபை எங்களுக்குள் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருப்பது அல்லது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பது மன வேதனையை தருகின்றது.
இருந்தாலும் முதலமைச்சர் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உட்பட கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து வடமாகாண சபையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அனைத்து அமைச்சுக்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தோம். அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
ஏன் முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவை மாற்றத்தில் கால தாமதத்தை ஏற்படுத்துகின்றார் என்ற விடயம் கேள்விக்குறியான விடயம்.
அந்த வகையிலே கட்சி ஒரு முடிவை எடுத்து மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் பெயரை கொடுத்துள்ளோம்.
அதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. எனவே இந்த சர்ச்சை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இதனை வைத்துக் கொண்டு பலர் பல விதமாக விமர்சிக்கின்ற ஒரு தன்மை ஏற்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் ஒரு போராட்ட இயக்கமாக இருக்கின்றோம்.
போராட்ட இயக்கமாக இருந்தவர்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் , அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து போராடியுள்ளனர்.
குறிப்பாக போராளிகள் பல இடங்களிலே உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனவே நாங்கள் பொதுவாக ஒட்டு மொத்த மக்களுடைய குரலாக இருக்கின்ற ஒரு கட்சி.நாங்கள் நிதானமாக செயற்பட வேண்டும். அந்த வகையிலே நாங்கள் நிதானமாக செயற்படுகின்றோம்.
எங்களுடைய மக்களுடைய அன்றாட பிரச்சினை குறிப்பாக காணாமல் போனவர்கள், தமது சொந்த காணிகளை மீட்பதற்கான போராடும் மக்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல துன்பங்களை இன்று வரை அனுபவித்து வரும் எம் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முயற்சி தற்போது இருக்கின்றது.
ஆகவே தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் உயர் மட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கூட இருக்கின்றது.
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம் என தெரிவித்தார்.
டெனிஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவு: செல்வம் அடைக்கலநாதன்....
Reviewed by Author
on
August 17, 2017
Rating:
No comments:
Post a Comment