அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனடாவில் இடம்பெறும் 2ஆவது சர்வதேச மாநாடு -


ஒட்டாவாவில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவிருக்கின்ற தமிழர் தேசமும், இலங்கையில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் தொடர்பான சர்வதேச மாநாடு தொடர்பில் கலந்துரையாடும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 16ஆம் திகதி Scarboroughஇல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாட்டை கூட்டாக முன்னெடுக்கும் ஏழு கனேடிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டாவது சர்வதேச மாநாட்டிற்கான அமைப்புக் குழுவின் தலைவர் பெனட் மரியநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டாக மாநாட்டை முன்னெடுக்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், இரண்டாவது சர்வதேச மாநாட்டின் கருப்பொருள், நோக்கங்கள், பங்குகொள்ளும் அறிவியலாளர்கள் மற்றும் மாநாடு நடைபெறவுள்ள இடம், காலம் என்பனபற்றி சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டாவாவில் 1999இல் நடைபெற்ற முதலாவது மாநாடு பற்றியும் அதன் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமையான வரலாற்றைக் கடக்க வேண்டியிருந்தது என்றும், தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இன்றைய நிலையிலிருந்து அடுத்த பத்தாண்டு காலத்துக்கான விடயங்களை சர்வதேச ரீதியில் அறிவியல் தளத்தில் நிறுவி வலுப்படுத்த வேண்டியமையும், இளைய சமூகத்தை இணைத்தவாறு இம்மாநாட்டின் தொகுப்புக்களை அடுத்த சந்ததியினருக்க கிடைக்க வழி செய்வதுமாகவே இம் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக அமைப்புக்குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை மீதான முன்னெடுப்புக்களுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில், இம்மாநாட்டில் கருத்தமர்வுகள் நடைபெறும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு குறித்து, ஊடக சந்திப்பில் அமைப்பின் தலைவர் பெனட் மரியநாயகம் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்கள் உட்பட கடந்த இருபது வருட கால ஈழத் தமிழர் நிலைமைகளை ஆராய்ந்து தொகுப்பதுடன், வேலைத் திட்டங்களை உருவாக்கவல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்தும் அம் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறான மாநாட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதினூடாக மாநாட்டை வெற்றிபெறச் செய்வதில் ஊடகங்களும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இம் மாநாட்டில் பங்கெடுப்பதில் தமது கருத்துக்களை இதன்போது சுருக்கமாக முன்வைத்துள்ளனர்.
கனேடிய தமிழர் தேசிய அவையின் பிரதிநிதி பாமிலா கேதீஸ்வரன் இது குறித்து கருத்து வெளியிடும்போது,
தொடர்ச்சியான தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இளையோர்களை இணைக்க வேண்டியதன் முக்கியத்தவம், தமிழ் மக்கள மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் தமிழ் மக்களது உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இவை தொடர்பில் அறிவியல் தளத்தில் முன்னெடுக்ப்படும் இம்மாநாடு முக்கியமானதொன்றாக அமைகின்றதெனவும், அந்த வகையில் இம்மாநாட்டை கூட்டாக நடாத்துவதில் கனேடிய தமிழர் தேசிய அவை பங்கு பெறுவதானது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிசிசாகா தமிழ் சங்கத்தின் பிரதிநிதியான ருஹ்சா சிவானந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
பல கனேடிய அமைப்புக்கள் கூட்டாக முன்னெடுக்கும் இம்மாநாட்டில் உலகில் பல நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள், புலமையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துக்கு உரித்துடைய மக்கள் என்கின்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை ஆய்வுகள், ஆதாரங்களுடன் முன்வைக்கவுள்ளனர்.
இப் புலமைசார், அறிவியல் ஆய்வானது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
தமிழ் கனேடிய சிவில் அமையத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரணவசிறி ஐயாத்துரை கூறுகையில்,
பங்கேற்கும் அனைத்து அமைப்புகளும் கூட்டாக இந்த மாநாட்டை முன்னெடுப்பது ஒரு சிறப்பான முன்னுதாரணம். அத்துடன் இன்றைய அரசியற் சூழலில் தமிழ் மக்களுக்கான உரிமை சர்வதேச சட்டச் சூழலில் சட்டபூர்வ நியாயத்தை பெறும் வகையில் பலப்படுத்த வேண்டிய அவசியத்திலும் இம் மாநாடு முக்கியத்துவத்துவம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி தனது இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலான காலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்களது உரிமைகள் சார்ந்த விடயங்களில் அறிவியலாளர்கள், புலமையாளர்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக முன்வைக்கும் மாநாடாக அமையும்.
போராட்ட வரலாற்றில் மாறிவரும் சூழலுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு வடிவங்களும் மாற்றம் பெறுகின்றன. அவ்வாறான பின்னணியில் 2009இன் பின்னராக தோற்றம் பெற்ற அமைப்புக்கள் பல கூட்டாக இம் முயற்சியை முன்னெடுப்பது முக்கியமானது.
அத்துடன் மிகப் பெரும் பொருட்செலவில் நடைபெறும இம்மாநாடு மக்களின் பங்குபற்றுதலோடு முழுமையாக நடைபெற ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒட்டாவா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற சக்தி நன்னிதம்பி, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாநாட்டில் பங்கெடுத்தவர் குறித்த மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இணைந்து எவ்வாறு முதலாவது சர்வதேச மாநாட்டை முன்னெடுத்தனர் என்றும், அந்த மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற 300இற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆய்வுரைகள் எவ்வாறு அரசியல்வாதிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், கல்வித் தேவைகளுக்கும் மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை வலுப்படுத்தவும் பயன்பட்டு வருவதாக தெரிவித்ததோடு, இவ் ஆய்வுரைகளின் தொகுப்பு உலகெங்கிலும் பல நூலகங்களில் இன்னும் கிடைக்கின்றது என்று குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில், இன்று முன்னெடுக்கப்படும் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் பெறுபேறுகள் எவ்வாறு தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் தமிழர்களின் தேசிய உரிமைப் போராட்டத்தையும் புரிந்து கொள்ளுதல் என்பவற்றில் உதவும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபெக் தமிழ் அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதி நித்தியா சுப்ரமணியம் காணொளிப் பதிவொன்றினூடாக தமது கருத்துக்களை இதன்போது வழங்கியுள்ளார்,
இம் மாநாடானது இனப்படுகொலையின் தன்மை, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அறியவும், தமிழ்த் தாயகத்தின் தற்போதைய சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தவும், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கவும், தமிழ் இனப்படுகொலையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் நிலங்கள், கலை, கலாச்சார மற்றும் பொருளாதார அழிவு ஆகியவற்றை வெளிப்படுத்தவும் உதவும் என தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் 1999 மாநாட்டில் பங்கேற்று, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா, நடைபெறவிருக்கும் இரண்டாவது மாநாட்டில் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் கருப்பொருள்கள், தலைப்புகள் மற்றும் கட்டமைப்பின் ஒரு பார்வை எனும் தலைப்பில் தமது உரையை வழங்கியுள்ளார்.
உலகெங்கிலும் இருந்து பிரபலமான அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, மற்றும் இனப்படுகொலை பற்றி தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்கள் எனவும், மேலும், குழு கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் திட்டமிடப்பட்டு மூன்றாம் நாள் மாநாட்டின் முடிவை பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி சமர்ப்பிக்கவும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இம்மாநாடு நடைபெறவிருக்கும் இடம் போக்குவரத்து தங்குமிட வசதிகள் என்பன பற்றிய தகவல்களும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இம் மாநாடு பற்றிய விபரங்களை சுருக்கமாக உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்ட கேள்வி நேரத்தின்போது,
முதலாவது மாநாட்டு காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையில் உருவாகியிருக்கும் காலச்சூழல் மாற்றத்தில் கூட்டாக முன்னெடுக்கப்படும் இம் முயற்சயின் தன்மை தொடர்பான கேள்விகள்,
மக்கள் மாநாட்டில் பங்கு கொள்வதற்கான ஒழுங்கமைப்புகள், தாயக அரசியலாளர்களின் பங்குபற்றல் மற்றும் இம்மாநாட்டு நோக்கங்கள் விரிவு பெறுவதில் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றில் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த கேள்விகளுக்கு, ஏற்பாட்டுக் குழு பிரதிநிதிகள் தகுந்த விளக்கங்களை அளித்திருந்ததுடன் மேலதிக விபரங்களையும், தரவுகளையும் மாநாட்டு இணையத் தளத்தில் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனடாவில் இடம்பெறும் 2ஆவது சர்வதேச மாநாடு - Reviewed by Author on March 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.