மூன்றாம் உலக யுத்தத்தினை இன்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது:ஆயர் பொன்னையா ஜோசப் -
மூன்றாம் உலக யுத்ததினை இன்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உலக சமாதான தினம் எஹாட் ஹரிதாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அமைதியான காலநிலைக்கு கைகொடுப்போம் என்னும் தலைப்பில் இந்த உலக சமாதான தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஹரிதாஸ் எகட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜி.அலெக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த உலகில் யுத்தங்கள்,சண்டைகள்,வன்முறைகள் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எனவே தான் மூன்றாம் உலக யுத்தம் எப்போது என எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இன்று இன்னொரு விதமான யுத்தத்தை இவர்கள் அறிமுகம் செய்கின்றார்கள்.
சுற்றாடல்,சூழல் பற்றிய விடயங்களில் எமக்கு விழிப்புணர்வு வேண்டும். எம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாங்கள் அழிக்கின்றோம். சூழலை மாசடையச் செய்கின்றோம். இதுவும் ஒருவித யுத்தமாகும். காற்றை மாசடையச் செய்கின்றோம்.
காலநிலை மாற்றங்களுக்கு காரணம் என்ன? வழைமையாக பெய்கின்ற மழை ஏன் பெய்யவில்லை என்பதன் அர்த்தம் ஏதோவொன்று எதிர்மாறாக நடக்கின்றது என்பதாகும். புதிய புதிய நோய்கள் வருகின்றன.
நேற்றைய பத்திரிகைச் செய்தியில் இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்காவை புதிய வைரஸ் தாக்கப்போவதாகவும் ஐம்பது மில்லியன் மக்கள் அதனால் பலியாகப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெங்கு நோய் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் சூழலை மாசடையச் செய்தமையாகும்.
நாம் உண்கின்ற உணவே விசமாகிவருகின்றது. விசத்தினை நாங்கள் உண்டு நோயை தேடிக்கொள்கின்றோம். சிலருக்கு மருந்தே உணவாகிவிட்டது.
இயற்கைப் பசளையை பயன்படுத்தாமல் செயற்கைப் பசளைகளை பயன்படுத்தி இன்னும் இன்னும் நாங்கள் எங்களை அழித்துக்கொண்டிருக்கின்றோம். இதுவும் ஒரு யுத்தமாகும்.
மரம் நடுங்கள், வனங்களை பாதுகாத்திடுங்கள், நீரை விரயமாக்காதீர்கள் என எத்தனையோ விளம்பரங்கள் செய்யப்பட்டும் அதற்கு எதிர்hறாகவே நடக்கின்றோம்.
எத்தனையோ பேர் உணவை வீணாக்குகின்றனர். ஆனால் பலர் உணவின்றி பசியால் வாடுகின்றனர். இதுவும் ஒரு யுத்தமாகும். ஆராக்கியமற்ற உணவுகளை உண்கின்றோம்.
போதைவஸ்து,மது போன்றவை எங்களை அழிக்கின்ற விடயங்களாகும். இவற்றுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது.
இறைவன் எமக்கென அழகிய உலகை தந்திருக்கின்றான். அந்த உலகை நாங்கள் ஒருபோதும் இழக்கக்கூடாது. இந்த உலகை நாம் இன்னும் மெருகூட்ட வேண்டும்.
அதன் மூலம் நன்மைகளை பெறவேண்டுமே தவிர அதனை அழித்து ஒரு யுத்தத்திற்கு வழிகோலுகின்றவர்களாக நாம் மாறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக யுத்தத்தினை இன்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது:ஆயர் பொன்னையா ஜோசப் -
Reviewed by Author
on
September 21, 2019
Rating:
No comments:
Post a Comment