அண்மைய செய்திகள்

recent
-

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு என் தம்பி அருண்மொழியை பார்த்து, அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும்" என குந்தவை (த்ரிஷா) வந்தியத்தேவனிடம் (கார்த்தி) கூறும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் 'இலங்கை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இலங்கையர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் காவியத்தில் 'ஈழ நாடு' என்ற பெயரே இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை என்ற பெயரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஈழம்' என்னும் சொல் தவிர்க்கப்பட்டு 'இலங்கை' என பயன்படுத்தப்பட்டடிருப்பது கவலைக்குரியது என வரலாற்றுத் துறை ஆர்வலரும், ஊடகவியலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஈழம்' என்பது இலங்கையின் பூர்வீக பெயரல்ல எனில், "ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி." சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட 'ஈழம்' எது? எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார். "அது மாத்திரமல்லாமல் ஈழத்து பூதந்தேவனார் யார்? ஈழ நாட்டிலிருந்து பாண்டிய நாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் விளங்கியவர். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்று புலவரானார் என்றும் கூறுவார்கள். ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது. அப்படியானால் 'ஈழம்' எனும் பெயர் வரலாற்று ரீதியாக எவ்வளவு பழைமையானது" என அவர் கேள்வி எழுப்புகிறார். 

மேலும், "சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரத்ணம், (வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம்) 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்னும் நூலில் ஈழம் தொடர்பான பல வரலாற்றுத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்ற நூலை பேராசிரியர் ஆக்கியுள்ளமை தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். ஆகவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஈழம்' என்னும் சொல் தவிர்க்கப்பட்டு 'இலங்கை' என பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் திரைத்துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும்" என, உமாச்சந்திரா பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னரான கதை என்பதனால், பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் இலங்கை என பயன்படுத்துவதை விடவும், 'ஈழம்' என பயன்படுத்தியிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் என ஊடகவியலாளர் யசிஹரன் தெரிவிக்கின்றார். 

பொன்னியின் செல்வன் புத்தகத்தில் சில இடங்களில் இலங்கை என்ற பெயர் பயன்படுத்தப்பட்ட போதிலும், அந்த இடத்திற்கு ஈழம் என்ற பெயரே பொருத்தமானது எனவும் அவர் கூறுகின்றார். ''ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கதை என்பதனால், ஈழம் என்று தான் பயன்படுத்த வேண்டும். புத்தகத்தில் அப்படி இருந்ததற்கு, அந்த கதை 1000 வருடங்களுக்கு முன்னர் செல்கின்ற கதை. ஆயிரம் வருடத்திற்கு முன்னர் ஈழம் என்ற நாடு இருந்தது" என அவர் கூறுகின்றார். ஈழம் என்று சொல்லி இருக்கலாம் என்றாலும், இலங்கை என பயன்படுத்தியது தவறு கிடையாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரத்ணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.. 

பிற்பட்ட காலப் பகுதியை பார்க்கும் போது, ஈழம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த காலத்தில் பொதுவாக இலங்கை என்றே அழைக்கப்பட்டது. இப்போது ஸ்ரீலங்கா என்பது அப்போது இலங்கை என்றே அழைக்கப்பட்டது. 72ம் ஆண்டுக்கு பின்னரே ஸ்ரீலங்கா என்று கொண்டு வந்தார்கள். அதற்கு முதல் 'இலங்கையை', இலங்கை, தாமிரபரணி, தம்பபண்ணி, ஈழம் என்று பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டு மொழிக்கு ஏற்றப்படி சொல் வழக்கத்தை கையாளுகிறது. சோழ கல்வெட்டில் தென் இலங்கை என்று வருகின்றது. ஈழம் என்றும் வருகின்றது. நான் பொதுவாக 'இலங்கை தமிழர் வரலாறு' என்று தான் எழுதுவேன். மற்றது 'ஈழத் தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்று புத்தகம் எழுதும் போது, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மரபுரிமை என்ற படியால், 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்ற பெயரை பயன்படுத்தினேன். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் இலங்கை என்று பயன்படுத்தப்படுகின்றது. ஸ்ரீலங்கா என்று பயன்படுத்தியிருந்தால், கண்டனத்திற்குரியது தான். இலங்கை என்பது தமிழ் பெயர்" என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் கூறினார். 

ரஞ்சன் அருண் பிரசாத்
 பிபிசி தமிழுக்காக..




பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Reviewed by Author on September 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.