மன்னார் புதைகுழி கிணற்றினை அகழ அனுமதி!
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி பகுதியில் உள்ள கிணற்றினை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக அதிலும் காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள்,எச்சங்கள் என்பன காணப்படலாம் என சந்தேகம் இருப்பதால் அவற்றை அகழ்வு செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வேண்டுகோள் விடுத்திருந்தனர்;. எதிர்வரும் 19ஆம் திகதி இந்த அகழ்வுப் பணியை ஆரம்பிக்க மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைகுழி; 32 தினங்கள் அகழப்பட்டிருந்தது.இதன்போது 83 மனித மண்டை ஓடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. வழக்கு நேற்று புதன்கிழமை மீண்டும் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.மன்னார் திருக்கேதீஸ்வர புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என இலங்கையில் பகுப்பாய்வு செய்வதற்கு வசதிகள் இல்லாமையால் அவற்றை அமெரிக்க சிமீத் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தை நாடவேண்டி இருப்பதாகவும் இது விடயமாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டது.
இதேநேரத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் - நாங்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு 18.6.2015ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக புவிசரிதவியல் பிரிவு பேராசிரியர் எஸ்.டபிள்யு.நவரட்ணவால் அவர்களின் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை மன்றுக்கு கொண்டு வந்திருந்தோம். இலங்கையில் குறித்த மாதிரியின் காலத்தைக் கணக்கிட முடியாது எனவும் அதை ஒரு விஞ்ஞானியின் உதவியுடன்தான் தீர்மானிக்க முடியும் என்றும் அதற்கு அமைவாகவும் அத்துடன் இது விடயமான சம்பவங்களை தீர்மானிப்பதற்கு நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டு விஞ்ஞானியின் தேவைப்பாட்டையும் அவர் தெளிவாக கூறியிருக்கின்றார். இதுவிடயமாக இந்த மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதுடன் தடயவியல் விசாரணையை கொண்டு நடத்துவதற்கு அதாவது இந்தப் புதைகுழி சம்பந்தமாக ஒரு நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நிபுணரின் பொறுப்புக்களை இந்த மன்றில் தேவையற்ற முறையில் சுமத்தாது சிலர் தாமே முன்வந்து சில விடயங்களை செய்யலாம். அதன் அடிப்படையில் காணாமல்போனவர்கள் குடும்பங்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் என்ற வகையில் இந்த நிபுணர்களை அடையாளம் காண்பதற்கு மன்றுக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருப்போம். இதை மன்றின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம் - என்றார். அத்துடன் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாகவும் விண்ணப்பம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாகவும் மன்னார் சட்டத்தரணிகள் சார்பாகவும் இங்கு பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் மன்றில் குறிப்பிடுகையில் - மன்னார் சட்டத்தரணிகள் சங்கமானது எங்கள் மன்னார் பிரதேச மக்கள் மட்டில் கரிசனையும் அக்கறையும் கொண்டு இருப்பதால் இந்த மன்னார் புதைகுழி சம்பந்தமாக ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணாமல் போனவர்கள் மட்டில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம் - என்றார். அதைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றம் நீதிவான் குற்ற புலனாய்வு அதிகாரிகளிடம் சில கேள்விகளை தொடுத்தார். அதாவது அப்பகுதியில் ஒரு மயானம் இருந்ததா? அது எந்தக் காலப்பகுதியில் இருந்தது? இது திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு அருகில் இருந்திருந்தால் ஆலயம் எந்தக் காலப் பகுதி தொடக்கம் இருந்து வருகின்றது அல்லது இந்த இடத்தில் எதாவது அனர்த்தம் நடைபெற்றதா? என்ற விடயங்களை மன்றுக்கு தெரியப்படுத்தாது இந்தப் புதைகுழியை மீள் அகழ்வு செய்வதை நிறுத்தும்படி குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். ஆகவே இவைகள் சம்பந்தமாக சகல அறிக்கைகளும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படாமல் வழக்கை நீடித்துச் செல்வதில் அர்த்தம் இல்லையென நீதிபதி தெரிவித்தார். அத்துடன் இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட்டு எதிர்வரும் 18.8.2015 அன்று மன்னார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருடன் இணைந்து அந்த பிரதேசத்துக்கு சென்று இனங்காணப்படும் பகுதியை பொதுமக்களும் விலங்குகளும் உட்செல்லாது தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிக்கை செய்வதற்கு நீதிபதி சட்டத்தரணிகள் அதிகாரிகள் செல்வர் என மன்றில் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 19ஆம் திகதி நில அளவை அதிகாரிகளைக் கொண்டு நில அளவை செய்வது எனவும் அங்கிருப்பதாகத் தெரிவிக்கப்படும் கிணற்றை புள்ளியிட்டு அது அகழ்வு செய்யப்படும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் புதைகுழி கிணற்றினை அகழ அனுமதி!
Reviewed by NEWMANNAR
on
August 08, 2015
Rating:

No comments:
Post a Comment