ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டறிய மதங்களை பயன்படுத்தி தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப் படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எங்களுடைய சகோதர குரு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொழுது, வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்று, தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என்று சொல்லி மிகவும் தெளிவாக தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தார்.
அவருடைய அனுபவப் பகிர்வு எல்லாராலும் வரவேற்று, அது உண்மை என்று அது சொல்லப் பட்டிருக்கின்ற வேளையிலே, மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களாகிய நாங்கள் அவருடைய இந்தக் கருத்துக்களை மிகவும் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.
அதே வேளையில், கொழும்பு மறைமாவட்டத்தின் உடைய குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அதற்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கத்தோலிக்க சமூகத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு கத்தோலிக்க குரு என்பவர் மற்றவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதற்காகத்தான் ஒரு குருவாக வருவது. அதனுடைய அந்தக் குருத்துவத்தின் உடைய மேன்மையை மறந்து, இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்ற பொழுது, அது பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை கொன்றது தான் இந்தப் போரின் உடைய நோக்கமாக இருந்ததே ஒழிய, இன அழிப்பின் நோக்கமாக இருக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாக பொய்யை அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், வரலாற்றில் 70 வருட காலத்துக்குக் காலம் நடைபெற்ற திட்டமிட்ட இன அழிப்புகளை மிகவும் தெளிவாக ஜீவந்த அருட்தந்தை சொல்லியிருப்பதை நாங்கள் இந்த வேளையிலே உறுதி செய்கிறோம்.
கடந்த 70 வருடங்களாக பல இடங்களில், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டது உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, சர்வதேச ரீதியிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த வேளையிலே எங்களுடைய ஜீவந்த அருட்தந்தையின் உடைய கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்வதோடு, அவருக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட மக்களும், மன்னார் கத்தோலிக்க மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதோடு, அவருடைய இந்தக் குரலை நசுக்குவதற்கான பல முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதை நாங்கள் முற்றிலும் எதிர் க்கிறோம்.
அவருடைய பயணம் தொடர நாங்கள் அவரோடு தோள் கொடுத்து, அவருடைய கருத்துக்களை இன்னும் வலுப்படுத்த நாங்கள் தயாராக இருப்பதோடு, அருட்தந்தை கிரிஷாந்த அவருடைய கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு கத்தோலிக்க குரு என்ற ரீதியிலே கத்தோலிக்க குருவினுடைய இந்தக் கருத்து ஒரு காட்டுமிராண்டித்தனமான கருத்து என்பதை இந்த வேளையிலே நான் பதிவு செய்து கொள்கிறேன்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
இந்த நாட்டிலே பிரச்சினைகள்,இனவாதம் வேரூன்றுவதற்கு காரணம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தான். அங்கே மக்கள் சம நிலையோடு, சமத்துவத்தோடு, மனித உரிமைகளோடு மதிக்கப்படுகின்ற சட்டமாக இந்த சட்டம் எங்களது இலங்கைத் தீவிலே இல்லை. அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாத நோக்கங்களுக்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதால், உண்மையாகவே இலங்கை உயர்ந்த ஒரு நாடாக வளர்வதற்கு இந்த சட்டம் இந்த மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
ஏற்கனவே அரசு வாக்களித்தது போல, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எடுத்து, முற்றிலுமாக எடுத்து, மக்கள் மனித உரிமைகளை அனுபவிக்கும் ஒரு நாடாக, அவர்தம் வாழ்வாக மக்களின் வாழ்வு மாறுவதற்கு, இந்த பயங்கரவாதச் சட்டம் முற்றிலும் தடையாக இருப்பதை இந்த இடத்திலே பதிவு செய்து கொள்வதோடு, இந்தச் சட்டத்தை இன்னொரு பெயரில் மாற்றி, அதையும் இன்னும் ஒரு பயங்கரமான ஒரு சட்டமாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற சட்டத்தை நாங்கள் முற்றிலும் எதிர்ப் பதோடு, அரசாங்கத்தினுடைய இந்த சட்டம் மென் மேலும் எங்களிடையே பிரிவினைகளையும், எங்களிடையே இனவாத மோதல்களையும், இனவாதத்தை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்கின்ற சட்டமாகவும் அது அமையப் போகிறது .
ஜனாதிபதி அவர்கள் எங்களது கருத்துக்களை உள்வாங்கி, இந்தச் சட்டத்தை அவர் ஏற்கனவே சொன்னது போல எங்களது தீவிலிருந்து அகற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கது .
எல்லா இன மக்களும் இந்த நாட்டிலே சமாதானமாக வாழ்வதற்கு ஒரு ஒழுங்கான ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இலங்கை மக்கள்.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இலங்கை மக்கள். அந்த ரீதியிலே நாங்கள் பார்க்கின்ற பொழுது, தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டு மிராண்டித்தனமான ஒரு செயல்.
இது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை. ஆகவே, அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள், இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில், நாங்கள் நிற்கிறோம். அரசாங்கம் நீதியோடு செயல்படும் என்ற நம்பிக்கையோடு அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
"இந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணைகளை குழப்புகிற நடவடிக்கை வந்து, எங்களுடைய தீவுக்கு, எங்களுடைய இலங்கை நாட்டுக்கு முரணான செயல்பாடாக அமைகிறது.
காரணம்,இலங்கை நாடு என்பது ஒரு சமய, ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால், பௌத்த மதம் அழகான சமய, ஆன்மீக சிந்தனை களோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம், அத்தோடு சைவ சமயம், அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.
உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் இதற்கு, இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.
ஆனால், சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது, இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், மிகப்பெரிய பிரச்சினைகளையும், விடிவுக்கு வராத, முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கப்போகிறது .
நாங்கள் கனா காணுகின்ற நாடு எங்களுக்கு கிடைக்குமா? நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாழ முடியுமா என்ற அந்த ஒரு சிந்தனை சிதைந்து போகும் ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
June 10, 2026
Rating:


No comments:
Post a Comment