எல் நினோ தாக்கத்தால் இலங்கைக்குக் காத்திருக்கும் பேராபத்து!
நாட்டில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிலவும் வானிலை நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
"சாதாரண ஆண்டின் 30% மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பலத்த மழை பெய்து குளங்கள் நிரம்பிச் சிலவேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஒக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும்போது இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும். பலத்த மழை பெய்யக்கூடும். வெள்ளப்பெருக்கு நிச்சயமாக வரும் என்று கூற முடியாது, எனினும் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன" எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் எல் நினோ நிலைமை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
August 25, 2026
Rating:


No comments:
Post a Comment