2000 குடும்பங்களின் காணி உரிமைக்கு நடுவே புதிய திட்டங்கள் — கிராஞ்சி, பொன்னாவெளியில் மக்கள் அச்சம்
“எங்கள் காணிகளுக்கே இன்னும் உரிமை ஆவணம் இல்லை… இந்த நிலையில் புதிய திட்டங்களுக்கு எங்கள் நிலங்கள் சென்றால் எங்கள் எதிர்காலம் என்ன?” —
கிராஞ்சி, பொன்னாவெளி மக்கள் கேள்வி
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் சுமார் 2000 குடும்பங்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், அப்பகுதிகளில் காற்றாலை, கனிமமணல் அகழ்வு மற்றும் சுண்ணக்கல் அகழ்வு உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யுத்தம் மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேறிய பின்னரும், தங்களது பூர்வீக மற்றும் வாழ்வாதாரக் காணிகளுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக ஒன்றுபட்ட மக்கள் அமைப்பு தனது கடிதங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
பல குடும்பங்களிடம் காணி ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன், ஏற்கனவே அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய காணி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
“மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் புதிய திட்டங்கள் ஏன்?”
இந்நிலையில், காற்றாலை திட்டம், கனிமமணல் அகழ்வு திட்டம், சுண்ணக்கல் அகழ்வு திட்டம் போன்றவை தொடர்பாக மக்களுக்கு போதுமான தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கே சுமார் 7 ஏக்கர் நிலம் தேவைப்படும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்படியானால், பல காற்றாலைகள் அமைக்கப்படும் போது எவ்வளவு நிலப்பரப்பு தேவைப்படும்? அந்த நிலங்களில் விவசாயம் செய்யும் குடும்பங்களின் நிலை என்னவாகும்? அவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? என்ற கேள்விகள் எழுகின்றன.
மக்களின் அச்சம் வெறுமனே காணி இழப்பை பற்றியது மட்டுமல்ல. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தி வந்த நிலங்களின் நிலை என்னவாகும் என்பதே அவர்களின் கவலையாக உள்ளது.
“அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல; எங்களையும் கேளுங்கள்”
மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை, திட்டங்களை முற்றாக நிராகரிப்பது அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களது காணிகளில் எந்தத் திட்டம் வரப்போகிறது, எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது, எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன, பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படும் என்பன குறித்து மக்களுக்கு முதலில் தெளிவான தகவல் வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
காணி உரிமைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஒரு குடும்பத்தின் நிலத்தில், நாளை ஒரு புதிய திட்டம் உருவானால் — அந்தக் குடும்பத்தின் குரல் எங்கே கேட்கப்படும்?
இதுவே தற்போது கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
Reviewed by Vijithan
on
August 23, 2026
Rating:


No comments:
Post a Comment