யாழில் வீடு புகுந்து நகைகள் திருடிய மூவர் கைது
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்தன.
ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைதான சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
August 23, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment