தென் கொரியாவில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசா
தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட இவர்கள், தாங்கள் சேவையாற்றிய கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன் கடலில் விழுந்த இரு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்தனர்.
விபத்து இடம்பெற்ற வேளையில் இந்த இலங்கையர்கள் தென் கொரியாவின் தொழில் அனுமதி முறைமையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசா அனுமதிப்பத்திரத்துடன் சேவையாற்றிக் கொண்டிருந்தனர்.
பொதுவாக அந்த விசா வகையின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளியொருவர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.
விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு மற்றும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி, தென் கொரிய நீதி அமைச்சினால் குறித்த இரு இலங்கையர்களுக்கும், மீண்டும் மீண்டும் விசாவை நீட்டிக்கத் தேவையின்றி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமைகாட்டும் இந்த நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்றைய இலங்கையரும் ஏற்கனவே நீண்டகால விசாவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசா
Reviewed by Vijithan
on
August 21, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 21, 2026
Rating:


No comments:
Post a Comment