அன்பு மலர்களே...
இந்தி சினிமாவை மூன்று ‘கான்’கள் ஆளுகிறார்கள் என்பது தெரிந்ததே. இதில் அமீர்கான் கொஞ்சம் சமத்து. சல்மான் கானோடு நெருங்கிய நட்பில் எப்போதும் இருப்பவர். ஷாருக் கானோடும் பெருசாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், சல்மானுக்கும், ஷாருக்குக்கும் சுத்தமாக ஆகாது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கத்ரீனா கைஃப் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் அடித்துக்கொண்டதாக கூட தகவல்கள் உண்டு. அதற்கு பிறகு எங்கேனும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தாலும், முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள்.
இடையில் ஓர் இஃப்தார் பார்ட்டியில் மட்டும் வேறு வழியில்லாமல் கட்டியணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். இரு கான்களையும் மீண்டும் சேர்த்துவைத்து பார்க்க மூன்றாம் கான் ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தார். ஆனால், சந்தர்ப்பம் அமையவே இல்லை. இந்நிலையில் சல்மானின் சகோதரி அர்பிதாவுக்கு கல்யாணம். ஊரெங்கும் ‘நோட்டீஸ்’ வைத்து அழைக்கும் சல்மான், ஷாருக்கை அழைப்பாரா என்பது பில்லியன் டாலர் சஸ்பென்ஸ் ஆக இருந்தது.
இருவருக்குமான மனத்தடையை ஷாருக் பெருந்தன்மையாக உடைத்தார்.
‘‘அர்பிதா குழந்தையாக இருந்தபோதே தெரியும். என் கைகளில் தவழ்ந்த குழந்தை அவள். எனக்கும் தங்கைதான். அழைப்பு வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக கல்யாணத்துக்கு போவேன்...’’ஷாருக்கின் இந்த பேச்சை கேள்விப்பட்ட சல்மான் நெகிழ்ந்துப் போனார். ஓடோடிப் போய் அழைத்தார். ஷாருக்கும் ஹைதராபாத்தில் நடந்த திருமணத்துக்கு முந்தைய நாள் ‘சங்கீத்’ கச்சேரியில் கலந்துகொண்டு ஜமாய்த்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்துக் கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
இருவரையும் சேர்த்து வைக்க பாடுபட்ட அமீர் கானுக்குதான் இந்த காட்சியை நேரில் காண கொடுத்துவைக்கவில்லை. அப்போது அவர் டெல்லியில் இருந்தார். அன்றிரவு முழுக்கவே தூங்காமல் இந்த சீனை மனதில் கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்ததாக அமீர் தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.
இந்தி சினிமாவில் கூட கண்களை வெள்ளமாக்கும் இப்படிப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் இப்போது வருவதில்லை.
அன்பு மலர்களே...
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
No comments:
Post a Comment