கர்ப்பிணிப் பெண் படுகொலை; டி.என்.ஏ பரிசோதனை இன்று.....
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் மற்றும் அயல் வீட்டுக்காரரதும் இரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபரது இரத்த மாதிரியை பெற்று அதனை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம். எம்.றியால் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தையடுத்து குறித்த கொலையை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர். அத்துடன் இவர்களது வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றது.
இவ்வாறன நிலையில் நேற்றைய தினம் இவ் வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது குறித்த இரண்டு சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் அவர்களது அயல் வீட்டுக்காரரும் நீதிமன்ற அழைப்பின் பெயரில் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது ஊர்காவற்றுறை பொலிஸார் இவ் வழக்கு தொடர்பான விசாரணையை முன்னெடுத்து செல்வதற்கு குறித்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் குறித்த மன்றில் முன்னிலையாகியிருந்த அயல் வீட்டுக்காரரதும் டி.என்.ஏ மாதிரி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கட்டளையை மன்று ஆற்ற வேண்டும் எனவும் மன்றை கோரியிருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மற்றைய நபரிடமும் மன்றானது டி.என்.ஏ மாதிரியை பெற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை மன்றானது பெற்றுக்கொண்டதையடுத்து குறித்த இருவரையும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையாகுமாறு மன்றானது கட்டளையை பிறப்பித்தது.
தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறித்த இரு நபர்களிடமும் பெற்றுக்கொள்ளும் டி.என்.ஏ இரத்த மாதிரியை உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்ப திகாரியிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ கையளிக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்றானது பணிப்புரை பிறப்பித்திருந்தது.
அத்துடன் இவ் வழக்கு விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த வழக்கு தவணையின் போது குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரின் இரத்த மாதிரியை இன்றைய தினம் பெற்றுக்கொள்ளுவதற்காக குறித்த சந்தேகநபரை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்த சிறைச்சாலை அதிகாரிக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கர்ப்பிணிப் பெண் படுகொலை; டி.என்.ஏ பரிசோதனை இன்று.....
Reviewed by Author
on
March 22, 2017
Rating:
No comments:
Post a Comment