அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள மயமாக்கலை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்: ஆனந்தன் எம்.பி -


சிங்கள மயமாக்கலை உடன் தடுத்து நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வவுனியா வடக்கு ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சிங்கள மயமாக்கலை உடன் தடுத்து நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகும்.
இந்த கிராமத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை மீள குடியேறாத போதும் அங்குள்ள விவசாய நிலங்களில் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த விகாரையில் பௌத்த பிக்கு ஒருவரும் அவரது காவலாளிகள் இருவரும் தங்கியிருக்கின்றனர்.

மக்களது சொந்த நிலங்களை துப்பரவு செய்வதற்கு தடையாக இருக்கும் வனவள திணைக்களத்தினர் சிங்கள மக்கள் என்ற காரணத்தினால் இவ் விடயத்தில் எந்த விதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

வவுனியா வடக்கின் கிழக்கு எல்லையில் உள்ள கச்சல் சமளன் குளம் கிராமத்தில் யுத்தம் காரணமாக பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட வவுனியாவிற்கு சொந்தமான இக்கிராமத்தின் குளம் அநுராதபுர கமநலசேவை திணைக்களத்தினரால் புனரமைக்கப்பட்டு சப்புமல்தென்ன எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கச்சல் சமளன்குளத்திற்கும் மேற்கே உள்ள ஊற்றுக்குளத்திற்கும் இடைப்பட்ட 3 மைல்கள் வரையான அடர்ந்த காட்டு பகுதியூடாக செல்லும் பாதையின் இருமருங்கிலும் காணித்துண்டுகள் துப்பரவுசெய்யப்பட்டு சிறுகுடிசைகள் அமைக்கப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றத்திற்கான உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அவர்களது சொந்தகாணிகளில் குடியமர்த்துவதற்கு பதிலாக எமது பரம்பலை மாற்றியமைக்ககூடிய வகையில் புதிய காடுகளை அழித்து புதிய சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் மக்களின் வரலாற்று தொன்மையினை அழிக்க எத்தனிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் சிங்கள மயமாக்கத்திற்கும் ஊக்கியாக அரச அதிகாரம் காணப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தினைப் பேசினாலும் கடந்த காலத்தினில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
கடந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் பலப்படுத்தப்பட்டும் வருகின்றன.
தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமமாக மாற்றமடைவது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ்க் கிராமம் கலாபோகஸ்வௌ என சிங்களக் கிராமமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இது போன்றே பல கிராமங்களினதும் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டமை வரலாறு. பதிவில் குளம் பதவியாக்குளம் எனவும் முதலிக்குளம் - மெறாவேவ, பெரிய குளம் - நாமல்வத்த, பட்டிப்பளை, கல்லோயா, புடவைக்கட்டு, சாகரபுர, அம்பாள் ஏரி - அம்பாறை, மணலாறு, வெலியோயா, குமரக்கடவை, கோமரங்கடவெல, பொரிய விளாங்குளம் - மகா திவுல்வெள, பனிக்கட்டி முறிப்பு, பனிக்கட்டியாவ என சிங்களப் பெயர் மாற்றம் கண்டு அவை சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன. இவை சில உதாரணங்கள் மட்டுமே பட்டியல் நீண்டு செல்கிறது.

ஒரு புறத்தில் இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. மறுபுறத்தில் வனவளத் திணைக்களம் காணிகளைப் பறிக்கிறது. மகாவலி அதிகார சபை மக்களின் காணிகளை துண்டாடுகிறது.
இன்னொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் தொன்மச் சின்னங்களை ஆக்கிரமித்து விகாரைகள் அமைக்கின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் செம்மலை நீராவியடிப் பிள்ளையார், வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, கல்லுமலை பிள்ளையார் ஆலயம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தின் நிலப் பகுதிகள் இவ்வாறெல்லாம் துண்டாடப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் நடந்த மண்ணில் நிலத்திற்கான போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னரும் குறிப்பாக தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் அமைந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படும் உங்களது தலைமையிலான அரசாங்கத்திலும் எமது நில உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாததன் விளைவே நாடு இன்று சந்திக்கும் பின்னடைவிற்கு மூல காரணம் என தாங்களே தெரிவித்துள்ளீர்கள்.

மேற்குறித்த சம்பவங்களுக்கு காரணமான அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருக்கும் தங்களுக்கு இவ்விடயங்கள் தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பால் ஆதரவு வழங்கப்பட்டு கடந்த வரவு செலவு திட்டத்தின்போது ஆயிரம் விகாரைகள் அமைக்கபடும் என்கின்ற செயற்பாடு வடக்கில் வலிந்து திணிக்கப்படுகிறது.

எமது நில உரிமை மட்டுமல்ல கலை,கலாசார விழுமியங்கள்,பண்பாடு,பாரம்பரியம் தொடர்ந்தும் மறுக்கப்படுவது கவலையளிக்கின்றது. பொது வெளியில் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் என்று பாறைசாற்றும் நீங்கள் இவ் விடயத்தில் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இனியும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

மேலும் இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு வழி சமைக்காது என்பதுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தங்களின் கனவு பலிக்காமல் போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஜனாதிபதி இவ் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கலையும், காடழிப்பையும் உடனடியாக தடுத்து நிறுத்தி எமது பூர்வீக நிலங்களில் நாம் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தங்களை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள மயமாக்கலை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்: ஆனந்தன் எம்.பி - Reviewed by Author on February 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.