அண்மைய செய்திகள்

recent
-

தொலைபேசி உரையாடலால் யாழில் பெண்ணொருவருக்கு இரண்டு கைகளிலும் இரு தடுப்பூசி ஏற்றிய சம்பவம்.

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் எனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டார்கள் என தடுப்பூசியைப் பெற்ற வயோதிபப் பெண் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை அவரது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே தனக்கு இரண்டு தடுப்பூசிகள் மாறி-மாறி இரு கைகளிலும் போடப்பட்டதாக அவர் கூறினார். தடுப்பூசி மையத்தில் எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு ஊசி போட்டவர் அதன் பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். நான் போகலாமா ? என அவரிடம் இரண்டு தடவைகளுக்கு மேல் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்றார். 

 நான் அவ்விடத்திலேயே இருக்க அங்கு வந்த இன்னொரு உத்தியோகத்தர் அம்மா கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார் எனவும் அவர் தெரிவித்தார். ஊசி போட்ட சிறு நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது . அங்கிருந்த வைத்தியர்களிடம் இதனைச் சொன்னேன். சற்று அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுமாறு அவர்கள் கூறினார்கள். எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன். அதிர்ச்சயடைந்த மகள், அவ்வாறு இரண்டு ஊசி ஒரே நேரத்தில் போடக் கூடாது எனக்கூறி நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தார். 

தடுப்பூசி ஒன்றா? இரண்டா? ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக்கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காக சென்றேன். முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின்னர் வைத்தியரை சந்திக்க அனுமதித்தார்கள். நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார். எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார். ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தி என்னை அனுப்பிவைத்தனர். 

மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார் எனவும் அப்பெண் கூறினார். இதேவேளை, இரண்டு தடுப்பூசி போட்டப்பட்ட சம்பவம் குறித்து வெளியான செய்தியை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மறுத்திருந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனை தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி உரையாடலால் யாழில் பெண்ணொருவருக்கு இரண்டு கைகளிலும் இரு தடுப்பூசி ஏற்றிய சம்பவம். Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.