மீள் குடியமர்வில் பிரதேசச் செயலக அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுகின்றனர்- முள்ளிக்குளம் மக்கள் _

மீள் குடியேறிய மக்களைப் பார்வையிடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஞாயிற்றுக்கிழமை முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்ற போதே அம்மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களாகிய நாங்கள் இடம் பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் எமது முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக கடந்த 15-06-2012 அன்று மதியம் மீள் குடியேறினோம்.
கடந்த யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர்.
பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம்,2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் மீள் குடியேற்றப்பட்டனர்.
ஆனால் முள்ளிக்களம் கிராம மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த மக்கள் மன்னார்,பேசாலை,தலைமன்னார்,தாழ்வுபாடுகீரி,மடுக்கரை,நானாட்டான் ,சிலாபத்துறை ஆகிய இடங்களில் உறவினர்களுடைய வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.
இதன் போது நாங்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும்,அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வந்தோம்.
எமது மீள் குடியேற்றம் தொடர்பில் நாங்கள்; பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டங்கள் ,கண்டனப்பேரணிகள் போன்றவற்றை மேற்கொண்ட போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பல்வேறு பட்ட உயர் மட்டங்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
எமது முயற்சியின் பலனாக (15-06-2012) அன்று முதல் முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் மீள் குடியேறினோம்.
கடற்படையினர் சில உதவிகளை வழங்கினர்.பின் அரச சார்பற்ற அமைப்புக்களும் எமக்கு உதவிகளை வழங்கின.
தற்போது நாங்கள்; அடர்ந்த காடுகளுக்குள் மரத்தடியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றோம்.
எங்களை முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் இது வரை வந்து பார்க்கவில்லை.
எமது பிரச்சினைகளைக் கேட்கவில்லலை.
ஆனால் அருகில் உள்ள பல கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது முசலி பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அதரிகாரிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உதவிகளை செய்தனர்.
ஆனால் எமது மீள் குடியேற்றம் முசலி பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உயர் மட்ட அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா? என அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.
எனவே எமது நிலைமையைக் கருத்தில் கொண்டு எமது அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுத்தருமாறு மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியமர்வில் பிரதேசச் செயலக அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுகின்றனர்- முள்ளிக்குளம் மக்கள் _
Reviewed by NEWMANNAR
on
June 25, 2012
Rating:

No comments:
Post a Comment