வடக்கில் 85,000 பேருக்கு அடையாள அட்டை!
இந்த செயற்றிட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் நடமாடும் சேவைகளை நடத்தி பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, மரண சான்றிதழ், விவாக சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுப்பதுடன் இதுவரை இதன் மூலம் 34,705 பேருடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக ‘கபே’ அமைப்பு தெரிவிக்கின்றது. இச்செயற்பாடுகள் தொடர்பில் ‘கபே’ அமைப்பும் இலங்கை மனித உரிமை மையமும் இணைந்து நேற்றைய தினம் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.
வட மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி அமைப்புகள் இணைந்து 41 தினங்களாக நடமாடும் சேவைகளை நடத்தி வருகின்றன. இதன் மூலம் 34,705 பேரது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக 20,341 விண்ணப்பங்களும் பிறப்புச் சான்றிதழுக்காக 14,000 விண்ணப்பங்களும் மரண மற்றும் விவாகச் சான்றிதழ்களுக்காக 300 விண்ணப்பங்களும் நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய இதுவரை 9000 ற்கு மேற்பட்டோருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து இரு வாரங்களுக்குள் இவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் யாழ். உடுவிலில் நடத்தப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டையோ அல்லது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமில்லாத 85,000 பேர் வட மாகாணத்தில் உள்ளனர்.
செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அம் மக்களுக்கு அடையாள அட்டை முக்கிய ஆவணமாகிறது. அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தத்தமது பகுதி கிராமசேவகரைச் சந்தித்து தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேற்படி அமைப்புக்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளன.
வடக்கில் 85,000 பேருக்கு அடையாள அட்டை!
Reviewed by Admin
on
August 31, 2013
Rating:

No comments:
Post a Comment