காணாமல் போனோர் குறித்த மஹிந்த ஆணைக்குழுவை ஏற்கமாட்டோம்!- தமிழ் கூட்டமைப்பு
யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினை ஜனாதிபதி மஹிந் தராஜபக்ச நியமித்துள்ளார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் கருத்து குறித்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 25ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றார்.
நவம்பர் மாதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகத் தலைவர்கள் வருகை தரவுள்ளனர்.
நவநீதம்பிள்ளையையும் உலகத் தலைவர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல காணாமல் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றுமுழுதாக மறுக்கின்றது. ஆனாலும் ஒரு சில குழுவினர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதனால் இவ்விடயம் குறித்து ஆராய ஆணைக்குழுவினை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் பிள்ளைகளும் மனைவிமார் முன்னிலையில் கணவன்மார்களுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்கள் இன்று காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது உள்ளது.
இதனைவிட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பெருமளவானோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இது குறித்தெல்லாம் தெரியாத அமைச்சரவைப் பேச்சாளர் விதண்டாவாதம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மனைவிமார்களும் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அழுது புலம்பி கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக் கோரிக்கையை அடுத்து காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனாலும் காணாமல் போனோரது உறவினர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவே இல்லை.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இது தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பிலும், அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டம் நடத்துவதற்கு காணாமல் போனவர்களை மீட்கும் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோரது உறவினர்கள் தமது பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்து திரிகின்றனர்.
இந்தநிலையில் ஏமாற்றும் நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
காணாமல் போனோர் குறித்த மஹிந்த ஆணைக்குழுவை ஏற்கமாட்டோம்!- தமிழ் கூட்டமைப்பு
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:

No comments:
Post a Comment