கிளிநொச்சி - முழங்காவில் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பு
கிளிநொச்சி – முழங்காவில் வழிச்சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்தனர்களுக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சேவை நடத்துனர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பினால் அவ்வழி தனியார் பஸ் சேவை பாதிப்படைந்துள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
தனியார் பஸ்கள் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்து ஆகியன கிளிநொச்சி டிப்போவுக்கு முன்னால் ஒரே இடத்தினில் தரித்து நின்றே சேவையிலிடுபட்டு வருகின்றன.
இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் செல்வதற்கான பயணிகள் ஏற்றும் இடத்தில் அரச பேரூந்து தரித்து நின்றது. அதேநேரம் தனியார் பஸ்ஸும் மேற்படி இடத்தில் நின்று பயணிகளை ஏற்றுவதற்காக வந்தபோது இரு பஸ் நடத்துனர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.
உடனடியாக அவ்விடத்திற்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் தனியார் பஸ்களின் சேவையில் கடமையாற்றும் மூவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி - முழங்காவில் இடையிலான தனியார் பஸ்கள் தமது சேவையினை இன்று புறக்கணித்தனர்.
புறக்கணிப்பில் ஈடுபட்ட தனியார் பஸ் சேவையினர் கருத்துக்கூறும் போது,
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால்; அறிவுறுத்தப்பட்ட சேவை நேரத்திற்கமைவாகவே தாங்கள் பஸ்ஸுனை அவ்விடத்தில் தரிப்பதிற்கு வந்ததாகவும், இருந்தும் அதற்கு இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சேவையில் ஈடுபட்டவர்கள் தம்முடன் முரண்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தங்களுடைய கருத்துக்களை கேட்காமல் தங்களில் மூவரை பொலிஸார் கைது செய்து கொண்டு சென்றமையினாலும், தாங்கள் சேவைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும், இதற்கு சரியான முடிவு கிடைக்கும் வரையிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி - முழங்காவில் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பு
Reviewed by Admin
on
October 11, 2013
Rating:

No comments:
Post a Comment