தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 32 தமிழக மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் என். கணேசமூர்த்தி நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய தமிழக மீனவர்கள் 32 பேரும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து 32 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து, அவர்களின் 8 படகுகளையும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை 116 தமிழக மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 148 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்களின் படகுகளும் மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 தமிழக மீனவர்களும் விடுதலை பெற்றுள்ளனர்.
இதேவேளை, தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன் பிரகாரம் மேலும் 30 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களை விடுவிப்பதற்கான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்திய – இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திடீரென பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
March 14, 2014
Rating:

No comments:
Post a Comment