மன்னார் சௌத்பார் தென்பகுதி கடற்கரையின் ஆத்துவாய் பகுதி மூடப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பாதிப்பு.Video,Photo
மன்னார் சௌத்பார் தென்பகுதி கடற்கரையின் ஆத்துவாய் பகுதி மூடப்பட்டுள்ளமையினால் மன்னார் நகர்புர மீனவர்கள் கடந்த சில வராங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் புகையிரத பாலம் குறித்த கடற்பகுதியூடாகவே தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.வருடக்கணக்கில் குறித்த புகையிரத பாலம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்ற போதும் இது வரை குறித்த பணிகள் பூர்த்தியாகவில்லை.
இந்த நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பகுதியில் உள்ள ஆத்துவாய் பகுதி மூடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.
ஆத்துவாய் பகுதி மூடப்பட்டுள்ளமையினால் கடற்கரையில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரத்திற்கு படகை பலர் சேர்ந்து இலுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
படகை கடலுக்குள் தொழிலுக்கு கொண்டு செல்லவும் பின் படகை கரைக்கு கொண்டு வந்து உரிய இடத்தில் தரித்து வைக்கவும் நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கடற்படையினர் குறித்த பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கியுள்ளதினால் கடற்கரையோடு படகை நிறுத்த அனுமதியை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
குறித்த புகையிரத பாலம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றமையினால் இரண்டு கண் பாலம் முற்றாக அடைக்கப்பட்டுள்ளதோடு மூன்று கண் பாலம் 10 அடி இடைவெளி மாத்திரம் விடப்பட்டு ஏனைய பகுதி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்துவாய்ப்பகுதியில் நீரில்லாத நிலை காணப்படுகின்றது.இதனால் படகை இழுத்துச் செல்ல முடியாத நிலை தற்போது தொடர்ந்து கொண்டு செல்கின்றது.குறித்த சௌத்பார் தென்கடல் பகுதியில் மன்னார் நகர் பகுதியைச் சேர்ந்த பனங்கட்டுக்கோட்டு,பள்ளிமுனை,பெரியகடை,சாந்திபுரம்,உப்புக்குளம்,
ஸ்ரேசன்,எழுத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 மீனவ குடும்பங்கள் குறித்த பகுதியூடாக நாளந்தம் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆத்துவாயை ஆழப்படுத்தி மீனவர்கள் எவ்வித பாதிப்புக்களும் இன்றி சிறந்த முறையில் தொழிலை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்,அரச அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதீக்கப்பட்ட மீனவர்கள் குறித்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மீனவர்கள் எங்களிடம் முறையிட்டுள்ளனர்.ஆனால் இதற்கான தீர்வை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாது.மன்னார் நகர சபையும்,மன்னார் பிரதேச செயலாளருமே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மன்னார் சௌத்பார் தென்பகுதி கடற்கரையின் ஆத்துவாய் பகுதி மூடப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பாதிப்பு.Video,Photo
Reviewed by NEWMANNAR
on
October 07, 2014
Rating:

No comments:
Post a Comment