360 பவுன் தங்க நகைகள் - பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் மன்னாரில் பெண் ஒருவர் கைது
மன்னாரில் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் நேற்று (15) அன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவரை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த 2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தென்னிந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல்
குறித்த நபர் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. ஒரு இருமாடி வீடு, ஐந்து அறைகளைக் கொண்ட மற்றுமொரு வீடு, ஒரு கார், சுமார் 360 பவுன் தங்க ஆபரணங்கள் அடங்கும்.
முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சொத்துக்கள் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு வீடுகளும் காரும் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடையுத்தரவை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளின் போது, கடத்தல் மூலம் பெறப்பட்ட 360 பவுன் தங்க நகைகளை சந்தேக நபரின் மாமியார் பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளமை தெரியவந்தது.
பின்னர், மன்னார் பகுதியில் உள்ள பல தங்க விற்பனை நிலையங்களில் நகைகளை அவர் விற்பனை செய்துள்ளார்.
சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் என்று தெரிந்தே, அவற்றைப் பணமாக்க உதவியமைக்காக பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டார்.
தற்போது சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
March 16, 2026
Rating:


No comments:
Post a Comment