அண்மைய செய்திகள்

recent
-

மீனவர் பிரச்சினைகளை மத்திய அரசாங்கமே தீர்த்து வைக்க வேண்டும்!- வல்வெட்டித்துறையில் பா.கஜதீபன்

ஆழ்கடல் மீனவர்களின் பிரச்சினைகளைக் களையும் அதிகாரங்களைக் கையில் வைத்துள்ள மத்திய அரசு, மக்களிடம் பொய்த் தகவல்களைக் கூறி குழப்பாமல் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
இன்று 6.10.2014 திங்கட்கிழமை காலை முதல் மாலை 05மணிவரை தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனபதையும், அவற்றுக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தி 160 க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து, அம்மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது தாயகப் பிரதேசத்திலுள்ள ஆழ்கடற் பிரதேசங்கள் யாவும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் அனுசரணையுடன் தென்னிலங்கையின் சிங்கள மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு எமது கடல் வளங்கள் சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்ற இந்நேரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது மீனவர்கள் சிலர் இப்பொழுது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சட்டத்தை அறிந்தவர்களுடன் உரையாடுகின்ற போது , ரோலர் மீன்பிடி முறையிலும் இயந்திரங்களைப்பாவிக்காமல் கைகளால் வலையை இழுத்து அத்தொழிலை மேற்கொள்ளும் போது அது சட்ட விரோதமானதல்ல எனத்தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மீன்பிடி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு சட்டத்தின் உதவியுடன் அவர்களுக்குரிய நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும்.  அதுவரைக்கும் அவர்களுக்குரிய இடைக்கால நிவாரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் செய்ய வேண்டிய மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், ஆழ்கடல்கள் தொடர்பான அதிகாரங்கள் எதுவுமற்ற எமது மாகாண அரசாங்கம் தான், இம்மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதான பொய்த் தோற்றப்பாடு ஒன்றை ஏற்படுத்தி எம்மக்களைக் குழப்பி வருகின்றது.

ஆனால் எம்மக்கள் மிகவும் தெளிவாக இன்றைக்கு வெளிக்காட்டியுள்ள இந்த ஒற்றுமை உணர்வை மிகப்பெரிய அளவில் கட்டியெழுப்பி தங்கள் உரிமைக்காக, இவை தொடர்பான அதிகராங்களையுடைய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய அளவிற்கு ஒன்றுபட்டு செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

எமது ஆழ்கடல் மீனவர்களின் பிரச்சினைகளைக் களையும் அதிகாரங்களைக் கையில் வைத்துள்ள மத்திய அரசு , மக்களிடம் பொய்த் தகவல்களைக் கூறி குழப்பாமல் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே வேளை மக்களுக்கான சரியான தகவல்களைக் கொடுத்து மக்களை அணிதிரட்டி தீர்வுகளைப் பெறும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய கடப்பாடும் மாகாணசபைக்கு உண்டென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் சதீஸ், மற்றும் உறுப்பினர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மீனவர் பிரச்சினைகளை மத்திய அரசாங்கமே தீர்த்து வைக்க வேண்டும்!- வல்வெட்டித்துறையில் பா.கஜதீபன் Reviewed by NEWMANNAR on October 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.