மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு மீளப்பெறப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மீளப்பெறப்பட்டதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி ஜனாதிபதி அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இந்த நடைமுறை நிறைவுபெறுவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் உள்ளிட்ட எட்டு பேருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
இதேவேளை, தமிழக மீனவர்கள் ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண் மற்றும் ராமேஷ்வரம், பாம்பன், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் மீனவர்கள் எதிர்பார்க்கும் சிறந்த முடிவைப் பெற்றுத் தருவதாக இதன்போது மத்திய அரசு உறுதியளித்ததாக நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு மீளப்பெறப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 19, 2014
Rating:


No comments:
Post a Comment