காணாமல் போனவர்களின் உறவினர்கள் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.-Photos
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் விசாரணையை இடை நிறுத்தி சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி இன்று திங்கட்கிழமை (23)மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கமம் மற்றும் பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் வடக்கு,கிழக்கு ஆகியவை இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட காணாமல் போனவர்கள் சம்பந்தமாக விசாரனை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் விசாரனைகளில் நம்பிக்கை இன்மையினை கண்டித்தும்,காணாமல் போனவர்கள் தொடர்பில் உடனடியாக சர்வதேச தரத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
இன்று(23) காலை 10 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு முன் குறித்த பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்கு அருகாமையில் ஒன்று கூடினர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை வைத்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டடத்தை மேற்கொண்டனர்.
பின் காலை 11.30 மணியளியவில் ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜரை கையளித்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,உப தலைவர் அந்தோனி சகாயம்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,பெண்கள் அமைப்பின் பிரதிதிதிகள்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் பல நூற்றுக்கணக்கான காணாமல் போனவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 23, 2015
Rating:
No comments:
Post a Comment