மரணதண்டனை நிறைவேற்றம், இந்தோனேசியா விளைவுகளை சந்திக்கும் - ஆஸ்திரேலியா எச்சரிக்கை
இந்தோனேசியாவில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆஸ்திரேலியா தனது தூதரரை திரும்ப அழைத்துள்ளது.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான், பிரேசில் நாட்டை சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட்டே ஆகியோர் உள்பட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசி நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கைதி மேரியின் மரண தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உயிர் பிழைத்தார். இதனையடுத்து தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 8 பேரது உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைசி நிமிடம் வரை போராடியும் தங்களின் தனிப்பட்ட வேண்டுகோளை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்து விட்டது, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்பையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்தோனேசியாவுக்கான தனது தூதர் பால் கிப்சனை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் திரும்ப அழைத்துள்ளார். கைதி ஒருவருக்காக ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், ‘இருவருடைய மரண தண்டனையையும் இந்தோனேசியா நிறைவேற்றி இருப்பது மிகக்கொடூரமானது. தேவையற்ற ஒன்று. அவர்கள் சிறையில் மனம் திரும்பி, மறுவாழ்வினை அமைத்துக்கொண்டவர்கள். நாங்கள் இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். அதே நேரத்தில், நடந்ததற்காக கண்டனம் தெரிவிக்கிறோம். இதை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு விட முடியாது’ என கூறினார்.
தூதரை திரும்ப அழைத்தது குறித்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையேயான உறவு முக்கியமானது. ஆனால் அது இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தூதர் இந்த வாரம் அங்கிருந்து திரும்பி வந்து விடுவார் என கூறினார். மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் கருத்து தெரிவிக்கையில், இதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும் என கூறினார். இந்தோனேசிய அரசின் நடவடிக்கையை முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றம், இந்தோனேசியா விளைவுகளை சந்திக்கும் - ஆஸ்திரேலியா எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
April 29, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 29, 2015
Rating:


No comments:
Post a Comment