யுத்தம் தந்த விதவைக் கோலம்: 90 ஆயிரம் பேரின் அவலம்!
பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர்.
யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை மரணம் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள கைம்பெண்களின் இன்னல்களைத் துடைக்கும் நோக்கைக் கொண்ட இந்நாளில் இலங்கையின் பல்லாயிரக்கணக்கான விதவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
போரால் 90 ஆயிரம் பேர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கிழக்கில் சுமார் 49 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதுடன் வடக்கில் சுமார் 40 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட இந்தப் பெண்களில் 12 ஆயிரம் பேர் 40 வயதை அண்மித்தவர்கள் என்பதும் 8000 பேருக்கு மூன்று வயது பிள்ளைகள் இருப்பதும் அரசின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் அதேவேளை பெரும்பான்மையான விதவைகள் தமிழ் மக்களாக இருப்பதைக் காட்டும் புள்ளிவிபரங்கள் சில செய்திகளை அழுத்தமாக எடுத்துரைக்கின்றன.
முல்லைத்தீவு, கருவேலன்கண்டல், மான் உருவிக் கிராமத்தில் வசித்து வருகிறார் சாரதா.
யுத்தத்தில் சாரதாவின் கணவர் பாஸ்கரன் கொல்லப்பட்டார்.
சாரதா பிள்ளைகளுடன் தனித்துவிடப்பட்டார்.
கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் பெரும் நெருக்கடியின் மத்தியில் வளர்த்து வந்தார் சாரதா.
சாரதாவின் ஒரு மகள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்டு கைவிடப்பட்டு வந்த நிலையில் காணாமற்போயுள்ளார்.
எல்லாவற்றையும் இழந்த சாரதா மனநிலை பாதிக்கப்பட்டு உளநல சிகிச்சை பெற்று வருகிறார்.
கைவிடப்பட்டு, காணாமற்போன பிள்ளை எங்கேனும் இருக்கிறதா என்று தினம் தினம் ஏங்கியபடி நாட்களைக் கழிக்கிறார் சாரதா…
பல்வேறு காரணங்களால் கணவன்மாரை இழந்து குடும்பத்திற்காக கொழுந்து பறிக்கும் நூற்றுக்கணக்கான விதவைகளில் அமிர்ந்துவும் ஒருவர்.
மலையகத்தின் ஹட்டன், நோர்வூட், மாநெலி தோட்டத்தில் வசித்து வருகிறார் அமிர்ந்து.
கணவரை இழந்த அமிர்ந்துவுக்கு மூன்று பிள்ளைகள்.
இவரின் பொருளாதார நிலையை சித்தரிக்கும் விதமாய் காட்சியளிக்கிறது கொட்டில் வீடு.
இளம் வயதிலேயே கணவரை இழந்த அமிர்ந்தா தோட்டத்தில் கொழுந்து பறித்தே தனது நாட்களை நகர்த்துகிறார்.
பிள்ளைகளின் கல்வி, வீட்டுச் செலவு என்று அனைத்துமே இவரது வருமானத்திலேயே தங்கியுள்ளது.
இருள் சூழ்ந்த அமிர்ந்துவின் வாழ்வில் கல்வி கற்கும் அவரது பிள்ளைகளே எதிர்கால வெளிச்சத்திற்கான ஒரே நம்பிக்கை.
யுத்தம் தந்த விதவைக் கோலம்: 90 ஆயிரம் பேரின் அவலம்!
Reviewed by NEWMANNAR
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment