“ஸிக்கா வைரஸ் காய்ச்சல் அவதானமாக இருங்கள்”
ஸிக்கா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை. இருந்த போதிலும் இது தொடர்பில் தரவுகளை சேகரித்து வருவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஷிக்கா என இணங்காணப்படும் ஒரு வகை வைரஸ் தொற்றானது தற்போது லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதுவரை இலங்கையில் எவரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை.
டெங்கு காய்ச்சலை பரப்பும் நுளம்பினால் ஷிக்கா வைரஸ் பரவுவதாக எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஷிக்கா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு காணப்படுவதாக அந்நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், எலும்பு மற்றும் மூட்டு வலி என்பன காணப்படுமாயின் உடனடியாக வைத்திய உதவியை பெறுமாறும் நாம் மக்களுக்கு அறிவுருத்தல்களை வழங்கியுள்ளோம்.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்றுமாயின் கருவிலுள்ள குழந்தையின் வளர்சிக்கு பாதிப்பு ஏற்படும் கண்டறிப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கமானது கருவிலுள்ள குழந்தைகளின் மூளையை தாக்குவதுடன் மரணத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இலத்தீன் அமெரிக்கா உட்பட இந்த வைரஸ் காணப்படுவதாக இணங்கானப்பட்டுள்ள 28 நாடுகளுக்கு செல்வோர் இந்த வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் நாம் கேட்டு கொள்கின்றோம். இதேவேளை, வெளிநாடுகலிருந்து வருகை தந்துள்ளவர்கள், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வைத்திய பரிசோதனை பெறும் போது தான் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருப்பவர் என்பதை சுட்டிக்காட்டுதல் சிறப்பான விடயமாகும்.
“ஸிக்கா வைரஸ் காய்ச்சல் அவதானமாக இருங்கள்”
Reviewed by Author
on
January 29, 2016
Rating:

No comments:
Post a Comment