ஜோசப் பரராஜசிங்கத்தின் வழக்கும் நீதி கிடைக்கும் என நம்பவில்லை! -மாவை...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடையவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறை வடைவதை முன்னிட்டு ஆற்றிய நினைவுப் பேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராசசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், பி.இந்திரகுமார், மா.நடராசா, ஞா.கிருஸ்ண பிள்ளை, த.கலையரசன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்;. இந்த நிகழ்வில் நினைவுபேருரை ஆற்றிய மாவை சேனாதிராஜா,
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், எங்களோடு கூடவே இருந்து வழிகாட்டியாக வும் தலைவனாகவும், போராளியாகவும் நண்பனாகவும் இருந்த ஜோசப் பரராஜசிங்கம் பிரார்த்தனை ஒப்புக் கொடுக்கின்ற புனிதமான தினத்திலே -நேரத்திலே அவர் கொல்லப்பட்டார்.
அழிக்கப்பட்ட தினத்திலும் மக்கள் பீனிக்ஸ் பறவைகள் போல எழுந்து நிற்கிறார்கள் என்ன இலட்சியத்துக்காக இலட்சக் கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டனவோ அந்த ஆத்மாக்களுடைய பலம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.
தமிழர் தாயகத்தின் அழகான மண்ணிலே நாம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு எதிராக தந்தை செல்வாவோடு, அமிர்தலிங்கத்தோடு தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட் டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தன்னை இளவயதிலிருந்து இணைத்துக் கொண்டு போராட்டங்களிலும் மகாநாடுகளிலும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுப்பதிலெல்லாம் பங்குபற்றி வந்தவர்தான் ஜோசப் பரராஜசிங்கம்.
எங்களோடு உழைத்த பலர் இப்பொழுது எம்மிடையே இல்லை. இலட்சியத்துக்கா இனத்தின் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக எமது இளைஞர் சமுதாயம் இந்த மண்ணிலே இருந்து வந்திருக்கின்றது.
ஜோசப் பரராஜசிங்கம் மனித உரிமைகளுக்காக இராணுவ, அரச படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார்.பல நாடுகளுக்குச் சென்று பல தூதர்களிடம் குரல் கொடுத்திருக்கின்றார்.
கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தில் ஒன்று பட்டுழைத்தவர். கட்சியின் பண்பைக் கட்டிக் காத்தவர்.தன்னுடைய வாழ்நாள் முழுவதை யும் நம்முடைய இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்.
குற்றவாளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கின்றது.தனித்தனியாக, கூட்டமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளின் இலங்கை அரசாங்கத் தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை.
அதனால் இன்னமும் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம்.பழைய தீர்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.இரத்தத்தில் இந்த மக்களின் உணர்வு இன்னமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களினால் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் வழக்கும் நீதி கிடைக்கும் என நம்பவில்லை! -மாவை...
Reviewed by Author
on
December 26, 2016
Rating:

No comments:
Post a Comment