வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கை படை வீரர்களின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது!
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இலங்கை இராணுவ வீரர்களினதும் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விமானம் மூலம் எதிர்வரும் 2ம் திகதி இவர்களின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை கட்டளைத் தளபதியால் உடல்கள் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது கடந்த 25ம் திகதி காலை 06.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் துருப்புக்காவி கவசவாகனத்தில் பயணம் செய்த இலங்கை இராணுவத்தின் 11வது இலகு காலாட்படையைச் சேர்ந்த கப்டன், ஜெயவிக்ரம, முதலாவது இயந்திர காலாட்படையைச் சேர்ந்த கோப்ரல் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர்.
குறித்த இருவரினதும் பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்த போதிலும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வேறு குழுவொன்றை அங்கு பணிக்கமர்த்த முடியாது போயுள்ளது.
இதேவேளை, தற்போது சமார் 200 இலங்கை இராணுவ வீரர்கள் மாலி நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கை படை வீரர்களின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது!
Reviewed by Author
on
January 31, 2019
Rating:

No comments:
Post a Comment