தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்... வைகோ வெளியிட்ட முக்கிய அறிக்கை -
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைக்க தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, மத்திய அரசு பல வழிகளிலும் ஒடுக்கி வருகின்றது.
சந்தேக வழக்குகளில் கைது செய்யப்படுகிற இளைஞர்களை விசாரணைக்குப் பின் விடுதலை செய்வது தான் வழக்கம். ஆனால் ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையுமின்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர்.
இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கிறார்கள்
எவ்விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே ஈழத்தமிழர்கள் அடைபட்டு கிடக்கின்றனர்.
சிறைப்பட்டுள்ள இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கம் அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது.
பல அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை.
கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன. ஈழத்தமிழர்களை மத்திய அரசு குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது.
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழ தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கியுள்ளன.
ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.
இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்... வைகோ வெளியிட்ட முக்கிய அறிக்கை -
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment