மனவலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம்-சாதனைப்பெண் மாற்றுத்திறனாளி திருமதி நேசராசா சுகந்தினி
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் தமிழ் பரா ஒலிம்பிக்கின் சம்பியனும் மாற்றுத்திறனாளியாகிய சாதனைப்பெண் விருது பெற்ற திருமதி நேசராசா சுகந்தினி அவர்களின் அகத்திலிருந்து….
தங்களைப்பற்றி-
நான் தந்தை செல்லையா.கேசவன் தாய பெயர்.கே.சந்திராதேவி
பிறப்பிடம் யாழ்ப்பாணம் மாவட்டம் வாழிடமாக கலிமோட்டையின் புளியங்குளம் மன்னாரில் எனது கணவர் அந்தோனிப்பிள்ளை.நேசராசா மகள்.அனுஸ்கா மகன்.பிரசாந் பிள்ளைகளுடன் மாற்றுத்திறனாளிகள் சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.
விளையாட்டு துறையில் ஆர்வம் எவ்வாறு உருவானது
பள்ளிக்காலங்களில் எனக்கு மிகவும் ஆர்வம் அதிகம் தான் குண்டு எறிதல் தட்டு எறிதல் ஈட்டி எறிதல் இம்மூன்று விளையாட்டிலும் எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை அதீதவிருப்பமும் ஆர்வமும் உள்ளதால் பாடசாலை மட்டம் மாகாணமட்டம் தேசிய மட்டம் பல பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வெற்றிக்கிண்ணங்களையும் பெற்றுள்ளேன். யுத்தத்தில் ஒரு காலை தொடைப்பகுதியுன் இழந்தபின்பு பொய்க்காலுடன் வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருந்தேன். எனக்கு எனது துடிப்பான செயலைப்பர்த்த எனது தோழிகள் ஊக்கமளிக்க மீண்டும் மைதானத்தில் கால்பதித்தேன் 2017ம்ஆண்டுஅதுவும் வெற்றியாய்அமைந்தது.
மாற்றுத்திறனாளியான பின்பு எவ்வாறு சாதிக்கமுடிந்தது….
எனக்கு திருமணமான பின்பு விளையாட்டு எண்ணம் மீண்டும் தோண்றியது எனது கணவரும் எனது தோழிகளும் ஊக்கம்கொடுக்க 2017ம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு குண்டு.தட்டு.ஈட்டி மூன்றிலும் 1ம்இடம் பெற்றுக்கொண்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் முதல் தடவையே வெற்றிபெற்றதும் என்னாலும் முடியும் விளையாடமுடியும் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் அதனால்தான் தேசியரீதியில் 03முறை தொடர்ச்சியாக தங்கம் பெற்றுள்ளேன் இன்னும் தொடருவேன்.
மாற்றுத்திறனாளியான பின்பும் முன்பும் விளையாட்டு அனுபவம்பற்றி…
மாற்றுத்திறனாளியவதற்கு முன்பு ஈட்டி எறியும் போது 25மீட்டர் ஓடிவந்துதான் எறிவேன் இலகுவானதாக இருந்தது ஆனால் கால் இழந்த பின்பு விளையாடும் போது எப்படி ஓடி வந்து எறிவது 2017 போட்டியிலும் நின்றுதான் எறிந்தேன். வெற்றியும் பெற்றேன் அப்போதுதான் புரிந்துகொண்டேன் ஈட்டி நின்று எறிந்தாலும் ஓடிவந்து எறிந்தாலும் ஒன்றுதான் என்று அதன் பிறகு நின்று எறியும் படி பயிற்சியும் பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து போட்டிகளில் கலந்து வருகின்றேன்.
தொடர்ந்து 03முறை சம்பியனாக சாதனை படைத்திருப்பது பற்றி----
வெற்றியென்பது சும்மா அல்ல எனது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணமாய்அமைந்தாலும் அதையும்தாண்டி எனக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குகின்ற எனது கணவர் ஏன்என்றால் எனது மகளும் மாற்றுத்திறனாளிஅவளையும் கவனித்துக்கொண்டுஎனக்கு உதவியாக இருக்கின்றார்.எனது தோழி வெற்றிச்செல்வி எனது விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களைஎல்லாம் வாங்கித்தந்து எந்த நேரமும் பயிற்சியும் முயற்சியுமாய் ஊக்கமளிக்கும் நல்ல தோழி அத்துடன் எனது பரா ஒலிம்பிக்பயிற்சிகளுக்கும் போடடிகளுக்கும் செல்லும் போது ஏற்படுகின்ற நிதிச்செலவுகளை பெறுப்பெடுத்து எனது வெற்றிப்பயணத்தில் உறுதியாய் இருக்கும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலக்ஷ்மி அவர்கள் ஒரு உறவாய் கொள்கின்றேன். தாய் பாசத்தினை பிள்ளைகள் மறக்ககூடாது என்பதுபோல எங்களுக்கான போட்டிகள் பயிற்சிகள் திடிரெனத்தான் அறிவிப்பார்கள் அந்த தருணத்திலேயே உடனே சகல ஏற்பாடுகளையும் செய்து அனுப்பிவைப்பார் அப்படியொருஅற்புதமான உறவு என்பேன்.
தங்களின் விளையாட்டுத்துறையில் மறக்கமுடியாதவிடையம் என்றால்….
ஆம் அதுதான் 2017ம் ஆண்டு சுகதாஸ விளையாட்டரங்கு கொழும்பில் மைதானத்தில் நான் போட்டிக்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். அங்கு நான் கண்ட காட்சி ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒவ்வொரு பயிற்சியாளர் போட்டி நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் கைகால்களை மசாச் செய்தும் கொண்டு இருக்கின்றார்கள். ஊக்கமளிக்க ஒரு கூட்டம் பின்னால் இருக்கு ஆனால் நானோ..... தனியாக நிற்கின்றேன். பெரிய கேள்வி எனக்குள் வெற்றிபெறுவேனா...? என்ற சந்தேகத்தோடு போட்டியில் கலந்துகொள்கின்றேன். என்னஆச்சரியம் கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் தங்கப்பதக்கம் பெற்றேன். உண்மையில் மறக்க முடியாததும் மிகவும் சந்தோசமான விடையமும் அதுதான் என்பேன.
மாற்றுத்திறனாளிப்பெண்ணாக சமூகத்திற்கு சொல்ல நினைப்பது….
சமூகத்திற்கும் குறிப்பாக பெண்களுக்கு நான்சொல்ல விரும்புவது இயல்பாக உங்களுக்கு என்ன திறமை இருக்கோ.... வருமோ.... அதைத்தான் செய்யவேண்டும். அதிலேதான் உங்களது முழுமையான முயற்சியையும் காட்ட வேண்டும் அப்போதுதான் அந்த துறையில் வெற்றி பெறலாம் அதை விட்டு தெரியாத துறையில் கால்வைத்து காலத்தினை வீணாக்காதீர்கள்.கவனமுடன் செயற்படுங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிவாய்ப்புக்கள் இல்லை சூழலும் இல்லை…....
ஆம் உண்மைதான் என்னைப்பொறுத்தமட்டில்என்னுடன் எனது கணவரும் மகளும் மாற்றுத்திறனாளிகள் தான் அப்படியிருக்க மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிவாய்ப்புக்கள் மைவதில்லைதான்
முதலாவதுவிடையமாக போக்குவரத்துப்பிரச்சினைபெரும்பிரச்சினையாகவுள்ளது சும்மாநடந்து பேரூந்து ஏறும் மாற்றுத்திறனாளிக்குபரவாயில்லை சக்கரநாற்காலியில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிக்கு பேரூந்து பயணம் மிகவும் கஸ்ரமே எத்தனையோ! பல தடவைகள் தனியார் பேரூந்தும் அரசபேரூந்தும் ஏற்றாமல் குறிக்கபட்ட நேரத்திற்கு போகாமல் பிந்திபோயிருக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள்.
வீட்டுத்திடடம்- கொடுக்கின்றார்கள் குடும்பத்தலைவன் மாற்றுத்திறனாளியாக இருக்கும் போது குடும்பச்செலவுகளை ஈடு செய்வதற்கே பெரும் கஸ்ரமாக இருக்கும் போது அத்திவாரம் போடுங்க முதல் காசுதாரம் என்பார்கள் அவர்களைப்பொறுத்தமட்டில் அது சரியாக இருக்கலாம் எங்களைப்போன்ற மாற்றுதினாளிகள் குடும்பத்திற்கு செய்ய முடியாத செயலாகும்.
வாழ்வாதாரம்-வாழ்வாதாரம்னும் போது எத்தனையோ விதமான வாழ்வாதாரங்களை கொடுக்கின்றார்கள் இல்லைஎன்றுவொல்வதற்கில்லைஆனாலும் அந்த வாழ்வாதாரம்பொருத்தமானதாக இருக்கின்றதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக சக்கர நாற்காலியில் இருப்பவருக்கு கோழிவளர்ப்பு தான் பொருத்தமான வாழ்வாதார தொழிலாக அமையும் அவருக்கு மாடு வளர்ப்பு தொழிலை ஏற்படுத்திக்கொடுத்தால் அவரால் அந்த நபரால் என்ன சொல்ல முடியும் செய்ய முடியம் அவர்அந்த மாட்டினை விற்பனைதான் செய்வார் அவரால் தான் மாட்டினை வளர்க்கமுடியாதே…பாருங்கள் பிரியோசனம் இல்லாத வாழ்வாதாரமே…
கோழி வளர்ப்பு- கோழி வளர்ப்பதற்கு முதலில் கூடுதான் கொடுக்கவேண்டும் ஆனால் முதலில் கோழிதான் கொடுக்கின்றார்கள் அந்தக் கோழிகளை எவ்வாறு பாதகாப்பாக வளர்ப்பது சிந்தித்துப்பாருங்கள்
மலசலகூட வசதி-சக்கரநாற்காலி மாற்றுத்திறனாளிகளுக்கு மலசலகூடவசதியினை கொடுக்கும் அவரவர் தேவைக்கு ஏற்றால் போல் விரைவாக கொடுக்கவேண்டும்அல்லவா பொருத்தமான வாழ்வாராரமும் தேவையான வசதிகளையும் உடனடியாகபெற்றக்கொடுங்கள் அதுதான் தற்போது எமக்கு தேவை….
தமிழ் பரா ஒலிம்பிக்கிலும் தேசியரீதியிலும் 03முறை சம்பியனான உங்களின் அடுத்த இலக்கு பற்றி….
ஏன்னுடைய இலக்கு எனும் போது அபுதாபியில் நடக்க இருக்கும் சர்வதேச பரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் அதுவும் குண்டு தட்டு,ஈட்டி 03லும் சம்பியனாகவேண்டும் என்பதுதான் எனது எண்ணமும் சிந்தனையும் ஆகும். அதற்கு முறையான பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றேன்.
முறையான பயிற்சி எனும் போது அதற்கான நிதிபற்றி…....
மொத்தமாக 12 பயிற்சிகள் இருக்கு அதில் மூன்று சாப்பாடுபழக்கவழக்கம் தொடர்பாகவும் மிகுதி 09 விளையாட்டு தொடர்பாகவும் அதுவும் பனிக்காலம் 03பயிற்சியும் மழைக்காலம் 03பயிற்சியும் கோடைக்காலம எல்லா கால சுழ் நிலையிலும் விளையாடுவதற்காக 03பயிற்சியும் தனித்தனியாக கொழும்பு ராஹமையில் தான் நடக்கும் ஒரு பயிற்சி 03 நாள் நடைபெறும் செலவு 9500 ரூபா செலவாகும் அப்படி 12 பயிற்சிக்கும் செலவினைப்பாருங்கள் இச்செலவுகள் அனைத்தினையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலக்ஷ்மி அவர்களினால் வழங்கப்படுகின்றது எனக்கு பெரும் உதவியாக உள்ளது.
தேசிய ரீதியில் சாதனை புரிந்தும் ஏன் இம்முறை சர்வதேச பரா ஒலிம்பிக் போகமுடியாமல் போனது ஏன்….
எல்லாம் பாகுபாடும் வேறுபாடும் தான் காரணம் தொடர்ச்சியாக 03முறை சம்பியனாக வருகின்றேன். பயிற்சியும் பெறுகின்றேன். சகோதர மொழி வீரரின் தேசிய சாதனையையும் உடைத்து இருக்கின்றேன். அப்படி இம்முறை அனுப்பபுவது என்றால் என்னையும் இன்னும் ஒரு பிரிவில் சாதனை படைத்த தமிழ் பொடியன் எங்கள் இரண்டு பேரையும் தான் அனுப்ப வேண்டும். அப்படி எங்கள் இருவரையும் அனுப்ப விருப்பம் இல்லை அதனால் இம்முறை 18 வயதுக்குகீழ்உள்ளவர்களை அனுப்புகின்றார்களாம் அடுத்த முறை 2023ல் தான் எங்களை அனுப்புவார்களாம் அதற்கும் எங்கள் இருவரையும் நிறுத்துவதற்காக தகுதிகான் முறையில் மீண்டும் 2020 இவ்வருடம் 08ம் மாதம் நடைபெற இருக்கின்ற தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டியிலும் எனது திறமையை நிரூபித்து ( சகோதர மொழி வீரரைத்தான் அனுப்புவதற்கான முயற்சியில் உள்ளார்கள்)
சர்வதேச பரா ஒலிம்பிக்போட்டிக்கு செல்வேன் அங்கும் சாதிப்பேன.அதற்கான பயிற்சியையும் முயற்சிகளையும் தொடர்கின்றேன் மன உறுதியுடன்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளியான உங்களை எப்படி அனுகுகிறார்கள்…..
யுத்த இடம்பெயர்வுக்கு பின் எனது கிராமத்தில் என்னை கண்டு இரங்குவதும் பாவப்படுவதும் விட்டுக்கொடுப்பதமாய் இருந்தார்கள் நான் அவர்களிடம் எனக்காக இரக்கப்படவேண்டாம் விட்டுக்கொடுக்கவும் வேண்டாம் எனக்குரியது எனக்கு கிடைக்கும் நானும் உங்களைப்போலதான் எல்லாம் செய்வேன் என்னால் முடியும் என்றுசொல்லி அவர்கள் மனதில் மாற்றத்தினைக்கொண்டு வந்தேன் நான் எனது தோழிகளுக்கும் சொன்னேன். மாற்றுத்திறனாளிகள் என்றால் இயலாதவர்கள் இயலாதையும் முயன்ற செய்பவர்கள் அதனால் கவலைப்படாதே யோசிக்காதே உனது திறமையை வெளிப்படுத்தி முன்னேறிச்செல் உன்னை கிண்டல் செய்பவர்கள்தான் மனதால் மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்கள் என்பதை எனது தோழிகளுக்கு அடிக்கடி சொல்வேன் நானும் விழிப்புணர்வு பெற்று எனது தோழிகளையம் சமூகத்தினையும் விழிப்படையச்செய்துள்ளேன்.
உங்களின் அடையாளம் என்றால்.......
எனது அடையாளம் என்றால் நான் அது விளையாட்டுத்தான் 2017ம் ஆண்டு சம்பியன் ஆனதில் இருந்து என்னைப்போன்ற ஏனைய மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் சுகந்தினி என்றால் சம்பியன் என்றுதான் அடையாளப்படுத்துவார்கள் 2023 நடைபெற இருக்கின்ற சர்வதேச பரா ஒலிம்பிக்கில் 03 பிரிவிலும் வெற்றி பெற்று மன்னாரின் அடையாளமாக திகழ்வேன்.
இனிவரும்காலத்தில் இருக்கின்ற வாழ்வாதார தொழிலைமேம்படுத்தி பொருளாதாரத்தினை வளர்த்து எனது விளையாட்டுதுறையில்சாதிக்கவேண்டும் முடியும் என்ற மனவுறுதியுடன் பயணிக்கின்றேன் என்னுடன் உறுதுணையாக கணவரும் நல்ல நண்க்ப்களும் உள்ளன பிறகு ஏன் கவலை முயற்சிவெற்றி தரும்
மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவியாக தங்களின் செயற்பாடு---குறிப்பாக மாற்றத்திறனாளிகள் ஆண்களைவிட பெண்களுக்கான தேவை அதிகமாகவுள்ளது அதனால் பெண்களின் தேவைகளுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளை வளிக்கொணர்வதற்கான செயற்பாடுகளில் என்னால் ஆனசேவைகளைசெய்து வருகின்றேன்.
தங்களின் அனுபவப்பகிர்வு----
பெண்களுக்கானதும் மாற்றுத்திறனாளிப்பெண்களுக்குமான ஒரு வேண்டுகோள் தற்போது பெண்களை பாடாய்படுத்தும் நுண்நிதிக்கடன் தான் எங்களால் திரும்பிக்கட்டமுடியும் என்றால் தான் கடன்களைப்பெறவேண்டும். இல்லை என்றால் பெறவே கூடாது கட்டிவைத்த மாடு போல தான் மனம் இருக்கவேண்டும் கட்டவிழ்த்த மாடுபோல மனம்இருந்தால் மனம் பலதையும் விரும்பும் ஆசைப்படுகின்ற அத்தனையும் செய்ய வேண்டுமானால் அது பெரிய விபரீதம் ஆகிவிடும் மாற்றுத்திறனாளிகள்ஏனையபெண்கள் என எல்லோரும் இந்த நுண்திக்கடன் மனவுளைச்சல் வாட்டி வதைக்கின்றது. தற்கொலை வரை கொண்டுபோய் விடுகின்றது.
நீங்கள் மனவலிமையுடன் இருக்ககாரணமாய் உள்ளவர்கள்....
எனது தோழிகளே நீ இதைச்செய்வியா என்று என்னிடம் கேட்பதில்லை உன்னால் முடியும் நீ செய்வாய் என்று ஊக்கப்படுத்துவார்கள் விளையாட்டு கலை நிகழ்வுகள் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என்ற அத்தனையிலும் என்னை ஈடுபடுத்தி உற்சாகமளிப்பதுஎ னதுதோழிகளே
அதிலம் குறிப்பாக எனது கணவர் அ.நேசராசா மகாலக்ஷ்மி வெற்றிச்செல்வி நண்பர்கள் வட்டம் இன்னும் நிறையப்பேர் உள்ளனர் எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை கூறிக்கொள்கின்றேன்.
தங்களின் வீட்டில் 03வரும்மாற்றுத்திறனாளிகள் எனும் வாழ்க்கை பொருளாதாரம் எப்படி…
நாங்கள் 04பேர்அதில் நான் எனது கணவர் மகள் மூவரும் மாற்றுத்திறனாளிகளாகத்தான் இருக்கின்றோம் எனது சிறந்த தோழியான வெற்றிச்செல்வியின்பெருமுயற்சியால் ஒருமுச்சக்கர வண்டிகிடைத்தது. அதுபோல ஒரு நிறுவனத்தினால் கோழிவளர்ப்பு வாழ்வாதர மும்கிடைத்தது அதனால் வாழ்க்கை பொருளாதாரத்தினை ஈடுசெய்ய கூடியதாக உள்ளது.
அதேபோல எனது விளையாட்டில் திறமையை வெளிப்படுத்தி முன்னேறிச்செல்வதற்காக நிதியுதவியினை வழங்கி வருகின்ற மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலக்ஷ்மி அவர்களின் பெரும் உதவிகள் என்னை உறுதியாக பயணிக்க வைக்கின்றது.
தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---
- தலைவி-மன்னார் நானாட்டான் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் அமைப்பு
- தலைவி-மன்னார்மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் மாதர் அமைப்பு
- உறுப்பினர்- மன்னார்மாவட்டத்தின் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின்
- உறுப்பினர்-தேசியசமாதானப்பேரவை மன்னார் கிளை
தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி---
TAMIL PARA SPORTS NORTHERN PROVINCE-2018
- SHOT PUT 1ST PLACE
- DISCUS THROW 1ST PLACE
- JAVELIN 1ST PLACE
- SHOT PUT 1ST PLACE
- DISCUS THROW 1ST PLACE
- JAVELIN 1ST PLACE
- SHOT PUT 1ST PLACE
- DISCUS THROW 1ST PLACE
- JAVELIN 1ST PLACE
- 2019 சாதணைப்பெண் விருது-அல்லிராணி மன்னார் மாவட்டம்
- நினைவுச்சின்னம் மக்கள் வங்கி கிளை மன்னார் மாவட்டம்
- வேக நடை 1ST PLACE -2017 சமூக சேவைகள் திணைக்களம் வட மாகாணம்
- வேக நடை 1ST PLACE -2018 சமூக சேவைகள் திணைக்களம் மன்னார் மாவட்டம் வட மாகாணம்
- முச்சக்கரவண்டிஓட்டம் 2ND PLACE -2018 மன்னார் மாவட்டம் சமூக சேவைகள் திணைக்களம் வட மாகாணம்
- எனக்கு விளையாட்டுத் துறையில் உள்ள ஆர்வம் போல் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் நிறைய ஆர்வம் உண்டு
MANNAR DISTRIC SPORTS -2019
- SHOT PUT 1ST PLACE
- DISCUS THROW 1ST PLACE
- JAVELIN 1ST PLACE
- SHOT PUT 1ST PLACE
- DISCUS THROW 1ST PLACE
- JAVELIN 1ST PLACE
மன்னார் மண்ணின் பெருமையை 10 வருடங்கள் கடந்தும் வெளிப்படுதிவரும் நியூமன்னார் இணையம் பற்றி…
நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது என்னை வீட்டுக்கு வந்து எனது செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள் செவ்வி கண்டுள்ளீர்கள் இது உண்மையில் அரிய கலைப்பணிதான் எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இது ஒரு வரலாற்றுப்பதிவாகும் எத்தனையோ கலைஞர்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.
நியூமன்னார் இணையக்குழுமத்திற்காக சந்திப்பு—
கலைச்செம்மல் வை.கஜேந்திரன்-BA
மனவலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம்-சாதனைப்பெண் மாற்றுத்திறனாளி திருமதி நேசராசா சுகந்தினி
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment