கொரோனா சூழ்நிலை காரணமாக யாழ் மாநகர சபை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது..........
நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்ற போது இம்முறை அவ்வருமானம் இழக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள்
தள்ளப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இவ் வருடம் யாழ் மாநகர சபை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகை சலுகையாக சபை அனுமதியோடு விலக்களிப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவ காலத்தில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்ற போதும் சபை ரீதியான
செயற்பாடுகளுக்காக சுமார் 70 லட்சம் செலவு செய்யப்படுவது வழமை
எனினும் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில் அனைத்து செலவுகளையும் சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக
குறைந்தளவாகவே சபைக்கு கிடைத்துள்ளது.
இவ்வாண்டு பெரும் நிதிநெருக்கடியினை எமது மாநகரசபைக்கு ஏற்படுத்தியுள்ளது இதன் தாக்கம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் தான் வெளிப்படும்.
இது தொடர்பில் மாநகர சபை முதல்வர் ஏனைய தரப்பினருடனும் ஆராய்ந்து ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவுள்ளோம் ...
அத்தோடு மேலதிகமாக ஏதாவது நிதி மூலங்களைதேடுவதா அல்லது நிலையான சேமிப்பில் இருக்கிற பணத்தை எடுத்து செலவழிப்பதா எவ்வாறு இந்த நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் நாம் விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment