பரீட்சை எழுதுவதற்கான பயத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 18 வயது மாணவன் இலங்கையில் சம்பவம்
உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.
இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஒரே சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.
தந்தை மறைத்து வைத்திந்த அவரது துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ சித்தி மற்றும் B சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by Author
on
June 25, 2024
Rating:


No comments:
Post a Comment