மன்னார் வங்காலை புனித ஆனாள் தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக இட மாற்ற கோரி பெற்றோர்,பழைய மாணவர்கள் இணைந்து போராட்டம்.
மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை(26) காலை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
பிள்ளைகளின் கல்வியை பாளாக்காதே,ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?,ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா?,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலை கடந்த பல வருடங்களாக கல்வியிலும்,விளையாட்டு நிகழ்வுகளிலும்,ஏனைய போட்டிகளிலும் சாதனை நிலை நாட்டி வந்த நிலையில் அண்மைக் காலங்களாக பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டதோடு,மாணவர்களின் சகல துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறித்த அதிபரை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன் னெடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கை களை மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கை விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
August 26, 2024
Rating:









No comments:
Post a Comment