மன்னார் செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் வாசிப்பதற்கு காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்- அதிகாரிகளின் அசமந்த போக்கே தமது நிலைக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற 35 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்பதற்கான காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும்,இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்.
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் குறித்த செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது.பிரதான வீதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது.
குறித்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில்,குறித்த கிராமத்தில் திருமணம் செய்து தனிக் குடும்பங்களாக சுமார் 35 குடும்பம் வசித்து வரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வசிப்பதற்கு நிரந்தர காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த 35 குடும்பங்களும் தற்காலிக கொட்டில்களிலும்,பெற்றோர்,உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வருவதுடன் தாங்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தமக்கு வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கூட காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமது கிராமத்தை சுற்றி போதுமான அளவு அரச காணிகள் காணப்படுகின்ற போதும்,காடுகளை வெட்டி எமக்கான காணிகளை பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்ற போது வனவள திணைக்கள அதிகாரிகள் இடையூரை ஏற்படுத்துவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாங்கள் தொடர்ச்சியாக கிராம அலுவலர்,நானாட்டான் பிரதேச செயலாளர் ,திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் எங்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அதிகாரிகளின் அசமந்த போக்கே எமது நிலைக்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் குறித்த கிராமத்தில் பல வீடுகளில் யாரும் இன்றி பூட்டிய நிலையில் காணப்படுவதாகவும் ஆனால் காணிகள் இன்றி இக் கிராமத்தில் 35 குடும்பங்கள் வரை வசித்து வருகின்ற போதும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக எமது கிராமத்திற்குள் வெள்ள நீர் உற்செல்லாத போதும் எமது கிராமத்தை சுற்றி வெள்ள நீர் காணப்பட்டது.இதனால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
எமது பிரச்சினைகளை உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனவே நாங்கள் அனைவரும் வேறு எந்த உதவியையும் கேட்கவில்லை.நாங்கள் குடி இருப்பதற்கு ஒரு துண்டு காணி கேட்கின்றோம்.
சொந்த காணி இருந்தால் மட்டுமே வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே எங்களதும்,எமது பிள்ளைகளின் எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு எமது கிராமத்தில் காணி இன்றி பல்வேறு துன்பங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்ற குறித்த 35 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,நானாட்டான் பிரதேச செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி எங்களுக்கு வாழ்வதற்காக ஒரு துண்டு காணி யை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Reviewed by Vijithan
on
July 08, 2026
Rating:


No comments:
Post a Comment