மன்னாருக்கு விரைவில் மணிக்கூட்டு கோபுரம் - அமைச்சர் விமல் ரத்நாயக்க உறுதி
மன்னார், ஆகஸ்ட் 22: மன்னார் நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைப்பது தொடர்பான யோசனை ஏற்கனவே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மன்னார் நகரசபையின் அனுமதி மற்றும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் போது, மன்னார் நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விமல் ரத்நாயக்க, இவ்விடயம் தொடர்பில் அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரிய பதிலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் நகரின் முக்கிய அடையாளமாகவும் நகரின் அழகை மேம்படுத்தும் வகையிலும் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
மன்னார் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
August 22, 2026
Rating:


No comments:
Post a Comment