81,000க்கும் மேற்பட்டோர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகத் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.
வறட்சியான வானிலையால் அதிக பாதிப்பு மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் வறட்சியான வானிலை காரணமாகக் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகக் குடிநீர் விநியோகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி வரும் நாட்களில் இந்நிலைமை தீவிரமடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மாவட்டச் செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதுவரை குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் ஏதேனும் சிக்கல்கள் நிலவினால், உடனடியாகச் சம்மந்தப்பட்ட பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
81,000க்கும் மேற்பட்டோர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு
Reviewed by Vijithan
on
August 31, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 31, 2026
Rating:


No comments:
Post a Comment