வறட்சியான வானிலையால் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதம் குறித்த தகவல்கள்
வறட்சியான வானிலையால் இதுவரை சுமார் 8,000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த பயிர்ச் சேதங்களுக்கான அவசர வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகக் கூறினார்.
அதற்கமைய, விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
மேலும், பயிர்ச் சேதங்களினால் இதுவரை அதிகளவிலான பாதிப்பு அனுராதபுரம் மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அம்மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"நிலவும் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்குவதற்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு விரைவான வேலைத்திட்டமாகும். இதன்படி நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும். அதேபோன்று, பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். அதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர், மொனராகலையில் 1,421 ஏக்கர், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர், அம்பாறையில் 1,055 ஏக்கர், ஹம்பாந்தோட்டையில் 783 ஏக்கர் என இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 விவசாயிகளின் சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தால், அவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள விவசாய சேவைத் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் அல்லது விவசாய மற்றும் கமநல காப்பீட்டுச் சபையின் அபிவிருத்தி அல்லது கள உத்தியோகத்தர்களைச் சந்தித்துச் சேதம் குறித்துத் தெரிவிக்க முடியும்." என்றார்.
Reviewed by Vijithan
on
September 01, 2026
Rating:


No comments:
Post a Comment