இந்திய பாதுகாப்பு அமைச்சர் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம்
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார்.
இந்தியாவும், இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பலதரப்பட்ட கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 இல் ஏற்பட்ட 'டித்வா'புயலுக்குப் பிறகும் முதலாவதாகப் நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது.
இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்படுத்துகிறது.
பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவையும், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம்
Reviewed by Vijithan
on
September 06, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 06, 2026
Rating:


No comments:
Post a Comment