மன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம் (பட இணைப்பு) -தமிழை மறக்கும் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர் தமிழர்கள்! செம்மொழி விழாவில் மன்னார் பிரதேச செயலர்

இவ்விழாவுக்கு சங்கத் தலைவர் பேராயர் தமிழ்நேசன் அடிகள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் மன்னார் மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை, வாழ்நாள் பேராசிரியர்.
அருணாசலம் சண்முகதாஸ், யாழ்.பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் ச.மோகனநாதன் ஆகியோரும் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றியபோதே பிரதேச செயலாளர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு முக்கியமாகப் பேசியவை வருமாறு:-
”ஆங்கிலத்தில் பேசுகின்றமை, ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகின்றமை ஆகியவற்றை தமிழ் மக்களில் பெரும்பாலானோர் குறிப்பாக இன்றைய இளம் சமூகத்தினர் பெருமையாக நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். இளையோரிடம் உள்ள ஆங்கில மோகத்தை இல்லாமல் செய்ய பெற்றோர் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழை காப்பாற்ற முடியும். அரச அலுவலகங்களுக்கு வருகின்றபோது பொதுமக்களில் அநேகர் (குறிப்பாக இவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திராது.) ஆங்கிலம் தெரிந்தவர்கள் மூலம் கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையும் மாற வேண்டும். இந்நிலையை மாற்றியமைக்க பொதுமக்களும், அரச உத்தியோகத்தர்களும் ஒத்துழைக்க வேண்டும். தாய் மொழிப் பற்றுடையவர்களாக நாம் அனைவரும் வாழ்தல் வேண்டும். அதுவே நம் அனைவருக்கும் பெருமை சோ்க்கும் விடயமாகும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழை மறக்கவேண்டியவர்களாக மாறிவிட்டனர். வீட்டில் தமிழைப் பேசிகின்றமை மூலம் தமிழ் மொழியை அவர்கள் அந்நாடுகளில் வளர்க்க முடியும். அத்துடன் எமது கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்.
” பேராசிரியர் சண்முகதாஸ் பேசுகையில் உலகில் உள்ள செம்மொழிகளில் நாட்டாரிலக்கியமும்,செவ்விலக்கியமும் சமாந்தரமாக உருவாகிய ஒரே மொழி தமிழ்மொழி மட்டும்தான்- இப் பெருமையைக் கொண்டுள்ள தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்திருப்பதிலும், நாம் விழா எடுத்து மகிழ்கின்றமையிலும் எவ்வித தவறுமில்லை என்றார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
"ஒரு செம்மொழிக்குரிய தகுதிகள் அனைத்தையும் கொண்டிருந்த போதும் தமிழ்மொழியைச் செம்மொழியாக அங்கீகரிப்பதற்கு எவரும் உரிய முயற்சிகளை எடுத்திருக்காத சூழல் முன்பு இருந்தது. அப்போது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆயர் றொபேர்ட் ஹார்ல்வெல் அடிகள் நூல் ஒன்றை எழுதினார்.
அதில் தமிழ்மொழியைச் செம்மொழி என முதன் முதலில் வெளிப்படுத்தினார். அதற்கு மிக நீண்ட காலத்துக்கு பின் அதாவது 2004ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12 ஆம் திகதி இந்திய அரசு தமிழுக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியது.
அரேபிய மொழியும், பாரசீக மொழியும் செம்மொழிகள் என்று அறிவிக்கப்பட்டவைதான். ஆனால் அவை இரண்டையும் செம்மொழிகளாக ஏற்கமுடியாது என்ற கருத்து இன்றைய அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்றது.தமிழ் மொழி அவ்வாறனதல்ல.
செம்மொழிக்கு வேண்டிய தகுதிகளை விடவும் மேலதிக சிறப்புகளை அது கொண்டுள்ளது. தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தை மட்டும் வைத்துக்கொண்டு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கிவிடலாம்.
அது தவிர பல தொன்மையான செவ்வியல் இலக்கியங்களையும், நாட்டார் இலக்கியங்களையும் நம் மொழி கொண்டுள்ளது. செவ்வியல் என்கிற உயர் இலக்கிய வடிவப் படைப்புகளும், பாமர மக்களிடம் இருந்து பிறப்பெடுக்கும் நாட்டார் இலக்கியப் படைப்புகளும் ஒருங்கே காணப்படுகின்ற ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான். இவ்வியல்பு வேறெந்த செம்மொழிக்கும் இல்லை."















மன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம் (பட இணைப்பு) -தமிழை மறக்கும் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர் தமிழர்கள்! செம்மொழி விழாவில் மன்னார் பிரதேச செயலர்
Reviewed by NEWMANNAR
on
December 18, 2009
Rating:

No comments:
Post a Comment