அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகளில் மோசடிகள்- இந்திய தூதரிடம் சுரேஷ்!

மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளை பெறும் பயனாளிகளை தெரிவு செய்வதில் பாரிய முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரடியாக முறையிட்டுள்ளார்.


 இது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் முறையிட்டுள்ளார்.
17.06.2006இல் மன்னார் கடற்பரப்பில் இடம்பெற்ற சண்டையின்போது பேசாலை மற்றும் வங்காலைப்பாடு மீனவ கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் வள்ளங்கள், வலைகள், என்ஜின்கள் மற்றும் வாடிகள் முதலான தொழில் உபகரணங்கள் தீவைத்து அழிக்கப்பட்டன. மேலும், வங்காலைப்பாடு கிராமத்திலும் மீனவர்களின் வாடிகள், வலைகள், என்ஜின்கள் தீயினால் எரிந்து நாசமாயின.
அத்துடன், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் போர்நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட வங்காலை, பேசாலை, தலைமன்னார், தாழ்வுப்பாடு கிராமங்களின் மீனவர்கள் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தவேளை, இராமேஸ்வரத்தில் தமது பிளாஸ்ரிக் வள்ளங்கள், என்ஜின்கள், வலைத்தொகுதிகளை மாவட்ட ஆட்சியாளர்களிடம் கையளித்துள்ளனர். மண்டப அதிகாரிகளும் ஆட்சியாளரும் பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தும் ஆவணங்களை இவர்களிடம் வழங்கியுள்ளனர். இவற்றுக்கு நட்டஈடு வழங்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் பின்னர் உறுதி வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இப்பொழுது அந்த மீனவர்களில் இருவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் 350 மீனவர்களுக்கு 175 மீன்பிடி வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதில் இதன் பயனாளிகள் தெரிவிலேயே இப்பொழுது பிரச்சினை நிலவுகின்றது. இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரைச் சந்தித்து நேரடியாக முறையிட்டுள்ளார்.
இந்திய துணை உயர்ஸ்தானிகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி அவர் தெரிவித்ததாவது:
தற்பொழுது பயனாளிகள் தெரிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. எனவே இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளைப் போரினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும், துணை உயர் ஸ்தானிகர் பயனாளிகள் பட்டியலை மீள்பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தயாரித்த பயனாளிகள் பட்டியலில் எவ்வித இழப்பையும் சந்தித்திராத மீன்பிடித் தொழிலில் ஈடுபடாதவர்களுக்கே பெரும்பாலான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட இருந்ததாகவும் இதைத் தடுத்து நிறுத்தி உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தமது உரையாடல் அமைந்ததாகவும் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மீனவர்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகளில் மோசடிகள்- இந்திய தூதரிடம் சுரேஷ்! Reviewed by NEWMANNAR on June 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.