ஒரு பஸ் பிரயாணியின் ஆதங்கம்
சாதாரண ஒரு பஸ் பிரயாணி
மன்னார்
2013. 12. 06
பதிப்பாளர்
Newmannar இணையம்
மன்னார்
வணக்கம்.
மன்னார் அரச பேரூந்து சேவையின் ஆசனம்பதிபவரின் அருவருப்புச்செயல்
என்னைப்பற்றிய அதிக அறிமுகங்கள் தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன். நான் ஒரு தனியார் பாடசாலை ஆசிரியர். ஓவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் M.ED கற்கை நெறிக்காக கொழும்பு செல்வது வழமை. சரியான நேரத்துக்கு செல்வதற்காகவும் செலவு குறைவு என்பதற்காகவும் நான் அரச பேருந்தையே அதிகமாக நாடுவது வழமை. வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகம் என்பதால் காலையில் 8.15 மணிக்கெல்லாம் ஆசனத்தை பதிவு செய்வது வழமை.
நவம்பர் மாத நடுப்பகுதியில் அரச பேருந்துக்கான கட்டணங்கள் அதிகரித்தது யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் இரண்டு வாரங்களுக்கு முன் ஆசனப்பதிவுக்கு சென்றிருந்த போது ரூ.500 ஐ கொடுக்க அவ்வதிகாரி ரூ.20 ஐ மிகுதியாகத்தந்தார். ஆனால் பற்றுச்சீட்டைப்பார்த்தபோது ரூ.471 என எழுதப்பட்டு இருந்தது. அச்சமயத்தில் என்னிடமும் சில்லறை இருக்கவில்லை ஆதலால் எதுவும் பேசாமல் வந்து விட்டேன்.
இன்று (2013.12.06) காலை வழமை போல் ஆசனப்பதிவுக்காகச் சென்ற போது கையோடு ரூ.471ஐ எடுத்துச்சென்றேன். ஆசனப்பதிவு முடிந்து பணத்தைக்கொடுத்தபோது அவ்வதிகாரியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆம் அவ்வதிகாரி என்னிடம் கீழ் கண்டவாறு சொன்னார். ' நீங்கள் வந்து காசை மட்டுமட்டாக தருவீங்க, ஆனா நாங்க உங்களுக்கு நீங்க கேட்ட யன்னல் சீற் தரணும். எங்களுக்கு இதுதானா வேலை. ரூபா 480 தான் நாங்க எடுக்கிறது' என்று என்னைப்பார்த்து சரியான தொகை கொடுத்ததுக்காக திட்டத்தொடங்கினார்.
நான் ஆச்சரியத்தில் இருந்து மீண்டுவர அதிக நேரம் எடுத்தது. ஒரு பொறுப்புள்ள அரச அதிகாரியின் செயல் ஆச்சரியத்தையும் தாண்டி அருவருக்கிறது. பற்றுச்சீட்டில் 471ரூபா என எழுதிய பின் 480 ரூபாவை கேட்டுப்பெறுவது எவ்வகையில் நியாயம்? ரூ.9 ஒரு பெரிய தொகை அல்ல மாறாக அவரின் பொறுப்பற்ற பேச்சு அரச பேருந்தின் பொறுப்புக்கள் மேல் வெறுப்பை உண்டு பண்ணுகிறது. பெருமளவில் பெற்றுக்கொள்ளப்படுவது மட்டும் இலஞ்சம் ஆகிவிடாது, இவையும் கூட ஒரு வகையில் இலஞ்சமே ஆகும். (அந்நியன் படத்தில் வரும் ஒரு ரூபா திருடினால் தப்பா என்கிற சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது). என்போல இனியாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே என் இலக்கு.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பல அரசசேவைகளும் சுதந்திரமடைந்தது ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் நாம் அவற்றின் கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளோம். அரச சேவைகளும் , அரச சேவையாளர்களும் மக்களுக்கே என்பதை அனைவரும் மறக்கவும் சரி மறுக்கவும் முடியாது.
நான் அடைந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளவும், இப்படியும் இங்கெல்லாம் நடக்கிறது என்பதைச் சொல்லவுமே உங்கள் பார்வைக்கு இதை அனுப்பிவைக்கிறேன்.
நன்றி
இங்கணம்
சாதாரண ஒரு பஸ் பிரயாணி
ஒரு பஸ் பிரயாணியின் ஆதங்கம்
Reviewed by Admin
on
December 12, 2013
Rating:
Reviewed by Admin
on
December 12, 2013
Rating:


No comments:
Post a Comment